‛ஆரஞ்ச் அலர்ட்’.. தமிழகத்தில் நாளை முதல் 2 நாள் கொட்டப்போகும் மிக கனமழை.. மக்களே உஷார்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்கள் மிக கனமழை பெய்ய உள்ளதாக கூறி இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. இந்த நாளில் 115.6 மில்லி மீட்டர் முதல் 204.4 மில்லி மீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலம் நடந்து வருகிறது. தென்மேற்கு பருவமழையை பொறுத்தமட்டில் சென்னையில் அதிகமாக பெய்தது. ஆனால் பிற மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. இந்நிலையில் தான் வடகிழக்கு பருவமழையை மக்கள் நம்பி உள்ளனர்.

வடகிழக்கு பருவமழையும் கூட தற்போது வரை குறைந்த அளவில் தான் பெய்துள்ளது. அதாவது அக்டோபர் மாதம் 30ம் தேதி முதல் நேற்று வரை பெய்ய வேண்டிய மழையில் 16 சதவீதம் வரை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் தற்போது பல மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்றைய தினம் சென்னையில் பல இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தான் தமிழ்நாட்டில் நாளை மற்றும் நாளை மறுநாள் என 2 நாட்களுக்கு ‛ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது.
வானிலையை பொறுத்தமட்டில் ஒவ்வொரு நிறத்தில் மழைக்கான அலர்ட் விடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பார்த்தால் ரெட் அலர்ட்டுக்கு முந்தைய எச்சரிக்கையாக கருதப்படும். ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு வாய்ப்பு இருந்தால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்படும். அதேபோல் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அதன்படி தற்போது தமிழகத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் நாளை மற்றும் நாளை மறுநாள் என இந்த 2 நாட்கள் தமிழ்நாட்டில் சென்னை முதல் குமரி வரை பல இடங்களில் மிக கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛நவம்பர் 22(நாளை) மற்றும் நவம்பர் 23 (நாளை மறுநாள்) ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் 2 நாட்களும் கன முதல் மிக கனமழை (115.6 முதல் 204.4 மில்லிமீட்டர்) பெய்ய வாய்ப்புள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் கேரளாவில் இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கும் நாளை, நாளை மறுநாள் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆந்திராவில் கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். கர்நாடகாவில் நாளை முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications