புதிய பாட நூல்களிலிருந்து இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி என்ற சர்ச்சைக்குரிய வரியை நீக்க உத்தரவு
சென்னை: தமிழகத்தில் புதிய பாடப்புத்தகங்களில் இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வரிகளை நீக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஏழாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி என இடம் பெற்றுள்ள வரிக்கு தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்தது. கல்வியாளர்கள் முதல் பல்வேறு அரசியல் கட்சியினரும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஆதரிக்கும் வகையிலேயே தவறான தகவலை திணிப்பதாக தமிழக அரசு மீது கடும் விமர்சனம் எழுந்தது.
கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு எதிர்ப்பு வலுத்ததை அடுத்து, இந்தியாவின் ஆட்சி மொழி இந்தி என இடம் பெற்றுள்ள வரியை நீக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதற்கு பதிலாக இந்தியாவின் அலுவல் மொழி இந்தி, இந்தி பேசாத மாநிலங்களில் இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும் என்ற வரியை சேர்க்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதே போல ஏழாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் மற்றும் முத்துராமலிங்க தேவர் ஆகியோர் பற்றி இடம் பெற்றுள்ள சர்ச்சைக்குரிய சில வரிகளை நீக்கவும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பு புத்தகத்தில் உள்ள, வைகுண்ட சாமிகள் பற்றிய வரியையும் நீக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதே போல சுதந்திரத்துக்கு பின் இஸ்லாமிய தலைவர்கள், முஸ்லீம் ஆட்சியை நிறுவ முயன்றனர் போன்ற பகுதிகளையும் நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது