தாய் பத்திரம் அவசியம்.. அசல் பத்திரம் தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்? ஆன்லைன் & ஆஃப்லைன் வழிமுறைகள்
சென்னை: நிலம் / வீடு யாருக்கு சட்டப்படி சொந்தம் என்பதை நிரூபிக்கும் அடிப்படை ஆவணம் தான் தாய் பத்திரம். விற்பனை, வாங்கல், வங்கி கடன், பட்டா மாற்றம் போன்ற வேலைகளுக்கு இது அவசியமாகும்.. சொத்தின் உரிமையாளரை காட்டும் ஆதாரம் இதுதான் என்பதால் கவனமாக வைத்து கொள்ள வேண்டும்.. ஒருவேளை தாய் பத்திரம் தொலைந்தால் என்ன செய்யலாம்? அதை இங்கே சுருக்கமாக பார்க்கலாம்.
தமிழகத்தில் பெரும்பாலான அரசு துறைகள் தற்போது ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் நேரடியாக அலுவலகங்களுக்கு செல்லாமல் பல சேவைகளை வீட்டிலிருந்தே பெற முடிகிறது. பத்திரப்பதிவு துறையிலும் இந்த மாற்றம் நடைமுறையில் உள்ளது.

அரசின் ஆன்லைன் சேவை
வீடு அல்லது நிலம் வாங்கும்போது மிகவும் முக்கியமான ஆவணமாக கருதப்படும் தாய் பத்திரம் என்பது அந்த சொத்தின் முதல் உரிமையாளர் யார், அவருக்கு அந்த சொத்து எப்படி வந்தது என்பதைக் காட்டும் அடிப்படை ஆவணம். இது பல ஆண்டுகள் பழமையானதாக இருப்பதால் காணாமல் போகும் வாய்ப்பும் அதிகம்.
தற்போது அரசு கொண்டு வந்துள்ள STAR 3.0 போன்ற திட்டங்களால், தாய் பத்திரம் முதல் பத்திரப்பதிவு வரை பல சேவைகள் ஆன்லைனில் எளிதாக செய்ய முடியும் என்பதால், பொதுமக்களின் நேரமும் உழைப்பும் பெரிதும் மிச்சமாகிறது.
முன்பெல்லாம் சொத்து பத்திரம் தொலைந்தால் அல்லது பழைய பத்திர நகல் பெற வேண்டுமென்றால் தாலுகா அலுவலகத்திற்கு நேரில் சென்று, பல ஆவணங்களை சமர்ப்பித்து நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்போது ஆன்லைன் வசதியின் மூலம், பத்திர அலுவலகம் செல்லாமலேயே அனைத்து சேவையையும் பெற முடியும்.
தாய் பத்திரம் தொலைந்துவிட்டால் ஆன்லைனில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
- https://tnreginet.gov.in என்ற அரசின் அதிகாரப்பூர்வமான தளத்திற்கு செல்லவும்
- Certified Copy / View Document என்பதை கிளிக் செய்து, மாவட்டம், SRO, பத்திர எண், ஆண்டு ஆகியவை உள்ளிட வேண்டும்..
- Search செய்து Apply for Certified Copy தேர்வு செய்து, இறுதியாக கட்டணம் செலுத்தி PDF நகலை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.. இதற்கு பதிவு செய்யப்பட்ட பத்திர எண், பதிவு செய்யப்பட்ட ஆண்டு, பதிவு அலுவலகம் (SRO) போன்றவை கட்டாயம் தேவைப்படும்..
முளைக்கும் சிக்கல்கள்
ஆனால் மிகவும் பழைய பத்திரங்கள் ஆன்லைனில் லேசில் கிடைக்காது.. தாய் பத்திரத்தை எடுத்து கொண்டால், சுமார் 100 வருடங்களுக்குமுன்பு, யார் அந்த சொத்தின் ஓனர்? அவருக்கு இந்த சொத்து எப்படி? எந்த பத்திரம் அல்லது அரசு ஆவணம் என்பதெல்லாம் அடங்கிய பத்திரமாகும்.. 100 அல்லது 200 வருடங்களுக்கு முந்தைய பத்திரம் என்றால், நேரில்தான் விண்ணப்பிக்க முடியும்..
நேரில் எப்படி விண்ணப்பிப்பது?
- தாய் பத்திரம் எந்த ஊரில் தொலைந்ததோ, அந்த ஊரிலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் உடனே பத்திர விவரத்தை குறிப்பிட்டு, "காணவில்லை" என்று புகார் தர வேண்டும்.
- காவல் அதிகாரியின் கையொப்பம், காவல் நிலைய முத்திரையுடன், புகாரை பெற்றுக்கொண்ட ரசீதை பெற்றுக்கொள்ள வேண்டும்..
- நீங்கள் தேடிப்பார்த்தும் பத்திரம் கிடைக்காமல் போனால், காவல் நிலையத்தில் எப்ஐஆர் பதிவு செய்யப்படும். இந்த எப்ஐஆர் அறிக்கையையும் பெற்றுக்கொள்ள வேண்டும்.
- காணாமல் போன ஆவணத்தை யாராவது கண்டெடுத்து ஒப்படைக்கிறார்களா? என்பதை காவல்துறை ஆராயும். மற்றொருபக்கம் காணாமல் போன ஆவணம் குறித்த விசாரணையையும் மேற்கொள்ளும்.
- காவல் நிலையத்தில் தரப்படும் தாய் பத்திரம் "கண்டுபிடிக்க முடியவில்லை" (Non Tracable) என்ற சான்றிதழை சான்றிதழுடன், வழக்கறிஞரை அணுக வேண்டும். "பத்திரத்தை காணவில்லை, கண்டெடுப்போர் குறிப்பிட்ட காலத்துக்குள் ஒப்படைக்க வேண்டும்" என்று தமிழ், ஆங்கிலத்தின் பிரபல நாளிதழ்களில் வழக்கறிஞர் விளம்பரம் செய்வார்.
- 15 நாட்களுக்குள் ஆவணங்கள் கிடைத்தால் அதை வழக்கறிஞர் உங்களிடம் ஒப்படைப்பார். ஆவணம் கிடைக்காவிட்டால், ஆவணத்தின் நகலை (Certified copy) சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பெற்று, விளம்பரம் செய்த பத்திரிகையுடன் இணைக்கப்பட்ட சான்றிதழை வழக்கறிஞர் தருவார்.. அதை நீங்கள் பெற்று, சம்பந்தப்பட்ட சொத்தினை பிரச்சனையில்லாமல் அனுபவிக்கலாம்.
ஆவணங்கள் அவசியம்
இதெல்லாம் அடிப்படையான ஒருசில வழிமுறைகள் என்றாலும், உங்கள் வழக்கறிஞர் அல்லது காவல்துறையினரிடம் அணுகினால், இதுகுறித்து விரிவான விளக்கத்தை பெற்றுக்கொள்ளலாம்.
சுருக்கமாக சொல்லப்போனால் நோட்டரி உறுதி மொழி பத்திரம், பத்திரிகை விளம்பரம் நகல், போலீஸ் ஸ்டேஷன் புகார் மனு, எப்ஐஆர், NOT TRACABLE சான்றிதழ் இப்படி 6 ஆவணங்களும் கையில் இருந்தால்தான், நீங்கள் பெற்றிருக்கும் "நகல் பத்திரம்", தொலைந்துபோன ஒரிஜினல் ஆவணங்களுக்கு பதிலாக பயன்படுத்த முடியும்..












Click it and Unblock the Notifications