தமிழ்நாடு முழுவதும் நாளை முதல் ORS பவுடர் பாக்கெட் விநியோகம்.. சுகாதாரத்துறை திட்டம்!
சென்னை: சென்னையில் 11 வயது சிறுவன் வயிற்றுப்போக்கால் உயிரிழந்ததன் எதிரொலியாக நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு இரண்டு ORS பவுடர் பாக்கெட் மற்றும் Sig மாத்திரை வழங்கப்படும் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் ஐஐடி மெட்ராஸ் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, தமிழ்நாடு அரசின் பொது சுகாதார மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குனரகம், சேப்பியன்ஸ் ஹெல்த் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து மருத்துவ வல்லுநர்கள், மருத்துவர்களுக்கான "குறைந்த உப்பு உணவு"(உப்பு குறைப்பு மற்றும் குறைந்த உப்பு மாற்றீடுகள்) குறித்து பயிலரங்கம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் பங்கேற்றார். உணவில் குறைந்த உப்பு பயன்பாடுகள் குறித்தும், உணவில் அதிகளவில் உப்பு உட்கொள்வதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றினார். இந்நிகழ்வில் மருத்துவர்கள், மருத்துவ வல்லுனர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற நோய்களை மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலமாக கண்டறிந்து ஒரு கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டாலும் அதை தடுக்கும் வகையில் உணவில் உப்பின் அளவை குறைத்து நோய்களிலிருந்து தற்காத்து கொள்வது குறித்து பயிலரங்கம் நடைபெறுகிறது.
உணவில் உப்பு தேவையான அளவை விட அதிகமாக பயன்படுத்துவதால் தான் பிரச்சனைகள் ஏற்படுகிறது. அனைத்து வயதினரும் குறிப்பாக இளம்வயதில் இருந்தே உப்பு பயன்பாட்டை குறைக்க வேண்டும். ரத்தக்குழாய் பாதிப்புகள், எலும்பு தேய்மானம் , சிறுநீரக பிரச்னைகள் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது." எனத் தெரிவித்தார்.
மேலும், சென்னை சைதாப்பேட்டையில் 11 வயது சிறுவன் தொடர் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்ததன் எதிரொலியாக நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு இரண்டு ORS பவுடர் மற்றும் sig மாத்திரை வழங்கப்படும் என பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.
ORS உப்பு சர்க்கரை நீர் கரைசல் என்பது உடலில் ஏற்படும் நீரிழப்பை சரி செய்யக் கூடியதாகும். சோடியத்துடன் குளுக்கோஸ் சேர்த்து ஒரு குறிப்பிட்ட அளவில் நீரில் கலந்து கொடுக்கும்போது உடல் உடனே உட்கிரகித்து கொள்கிறது. இதனால் நீர் சத்து குறைபாடு ஏற்படாது. வயிற்றுப்போக்கு ஏற்படுவதால் உடலில் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பு இதனால் சரிசெய்யப்படும்.












Click it and Unblock the Notifications