Armstrong: ஜாமீனில் வெளியே வந்த 12 பேர்! கொலை செய்ய ஸ்கெட்ச் போட்ட ஆம்ஸ்ட்ராங்கின் ரைட் ஹேண்ட்
சென்னை: சென்னை பெரம்பூரில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 12 பேர் ஜாமீனில் வெளியே வந்ததை தொடர்ந்து அவர்களை பழித்தீர்க்கும் நோக்கத்தில் சதி திட்டம் தீட்டியதாக ஒற்றைக் கண் ஜெயபாலை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை புளியந்தோப்பை சேர்ந்தவர் பிரபல கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ். இவர் மீது கொலை, கொள்ளை, கடத்தல் வழக்குகள் நிலுவையில் இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு பட்டினப்பாக்கம் லூப் சாலையில் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு கும்பல், ஆற்காடு சுரேஷை பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடியது. இந்த கொலை சம்பவத்தின் போது ஒற்றைக் கண் ஜெயபால் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆற்காடு சுரேஷின் கூட்டாளிகள் அவரை கொலை செய்ய திட்டமிட்டிருந்தனர்.
இதை அறிந்த போலீஸார், ஜெயபாலையும் அவரின் கூட்டாளிகளையும் கைது செய்தனர். இந்த நிலையில் ஆற்காடு சுரேஷை கொலை செய்தவர்களுக்கு ஆம்ஸ்ட்ராங்தான் உதவிக்கரம் நீட்டினார் என ஆற்காடு சுரேஷின் கூட்டாளிகள் கருதியிருந்தனர். இதனால் ஆம்ஸ்ட்ராங் மீது கடும் ஆத்திரத்தில் இருந்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ரவுடி நாகேந்திரன், அவரது மகன் அஸ்வத்தாமன், ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உள்பட 27 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில் திருவேங்கடம் என்பவர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். அண்மையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏ1 குற்றவாளியான நாகேந்திரன் உடல்நிலை பாதிக்கப்பட்டு அண்மையில் உயிரிழந்தார். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீன் கேட்டு அஸ்வதாமன், அஞ்சலை உள்ளிட்ட 14 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இவர்களில் 12 பேருக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் கூடிய ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியது. இந்த நிலையில் இவர்கள் 12 பேருக்கும் ஆம்ஸ்ட்ராங் ஆதரவாளர்களால் எந்த அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க சென்னை போலீஸார் கண்காணித்து வந்தனர்.
12 பேர் ஜாமீனில் வந்ததை அறிந்த ஆம்ஸ்ட்ராங் கூட்டாளி ஒற்றைக் கண் ஜெயபால் (கைதாகி ஜாமீனில் வெளியே வந்தார்) என்பவர், அவர்களை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து திருமழிசையில் பதுங்கியிருந்த ஜெயபாலை வெள்ளவேடு போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications