சென்னையில் நான் முதல்வன் திட்ட பயிற்சி வகுப்பில் வழங்கப்பட்ட பயறில் பல்லி.. பேராசிரியர்களுக்கு வாந்தி மயக்கம்
சென்னை: சென்னையில் போட்டித் தேர்வு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் உதவி பேராசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பயறில் பல்லி விழுந்து இருந்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் 10- க்கும் அதிகமான உதவி பேராசிரியர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை கோட்டூர்புரத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுகளுக்கு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கும் உதவி பேராசியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்ட பயிற்சியில் 3-வது நாளாக இந்த பயிற்சியானது இன்றும் நடைபெற்றது.

இந்த பயிற்சிக்கு நடுவில் உதவி பேராசிரியர்களுக்கு பயறு வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பயறை சாப்பிட்ட சிறிது நேரத்தில் உதவி பேராசிரியர்களுக்கு அடுத்தடுத்து வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
விசாரணையில் அங்கு வழங்கப்பட்ட பயறில் பல்லி விழுந்து இருந்தது தெரியவந்தது. 10க்கும் மேற்பட்ட உதவி ஆசிரியர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே மற்ற உதவி ஆசிரியர்கள் கல்லூரி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications