அதுக்குள்ளயா? விஜய்க்கு ஷாக்.. 100+ தவெக தொண்டர்கள் பாமகவில் இணைந்ததால் பரபரப்பு! என்ன காரணம்?
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே நாளை (அக்டோபர் 27) விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் நிலையில், தவெக உறுப்பினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாமகவில் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சியை முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார். தேர்தல் ஆணையமும் விஜய்யின் கட்சியை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக அங்கீகரித்துள்ளது.

தமிழக வெற்றி கழகத்தின் கொடி கடந்த ஆகஸ்ட் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. கட்சிக்கான கொடிப் பாடலும் வெளியிடப்பட்டது. அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ள விஜய் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்தான் நமது இலக்கு என தனது தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நாளை நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி சாலையில் பிரம்மாண்டமாக நாளை மாலை 4 மணிக்கு மாநாடு நடைபெற உள்ளது. மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்றே விக்கிரவாண்டியில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர்.
நாளைய மாநாட்டில் தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் நோக்கங்கள், கொள்கைகள், திட்டங்கள் குறித்து, தொண்டர்கள் இடையே உரையாற்ற இருக்கிறார். கட்சி தொடங்கப்பட்ட பின்னர் அவரது முதல் மாநாடு மற்றும் முதல் அரசியல் உரை என்பதால், அனைவரும் பெரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் விஜய்க்கு மட்டுமல்லாது தவெக நிர்வாகிகளுக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக தமிழக வெற்றி கழகம் கட்சியை சேர்ந்த 100 தொண்டர்கள் பாட்டாளி மக்கள் கட்சியில் இணைந்துள்ளனர். திண்டிவனத்தில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்னிலையில் நெய்வேலி சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகியான ஜிகே தமிழரசன் தலைமையில் 100 தொண்டர்கள் பாமகவில் இன்று இணைந்துள்ளனர்.
விஜய் முதல் அரசியல் மாநாடு நடைபெற உள்ள நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தொண்டர்கள் திடீரென பாமகவில் இணைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வெற்றிக் கழக மாவட்ட நிர்வாகி தமிழரசன் செய்தியாளர்களிடம் பேசுகையில் தமிழக வெற்றி கழகத்தின் நிலைப்பாடுகள் செயல்கள் பிடிக்காததால் அக்கட்சியிலிருந்து விலகி பாமகால் இணைந்ததாக தெரிவித்துள்ளார்.

தவெகவில் இருந்து பாமகவில் இணைந்துள்ள இந்த இளைஞர்கள் நாளை நடைபெறும் தவெக மாநாட்டிற்காக நெய்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர். பாமகவில் இணைந்த பின்னர் அப்பகுதியில் வைக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக பேனர்களை அவர்கள் அகற்றியுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழக மாநாடு வி.சாலையில் நாளை நடைபெற உள்ள நிலையில், மாநாட்டு திடலில் அம்பேத்கர், பெரியார், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களின் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட தவெக தொண்டர்கள், அக்கட்சியில் இருந்து விலகி, பாமகவில் இணைந்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications