TNPSC Group 2: குரூப் 2, 2ஏ தேர்வுகள் தொடங்கியது.. ஒரு காலி பணியிடத்துக்கு 858 பேர் போட்டி!
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான TNPSC நடத்தும், குரூப் 2, 2ஏ தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. 5.53 லட்சம் பேர் இந்தத் தேர்வில் பங்கேற்கின்றனர். 9 மணி வரை தேர்வர்கள் தேர்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். 9.30 மணிக்கு தேர்வுகள் தொடங்கியுள்ளன.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில், மூத்த உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சிறப்பு பிரிவு உதவியாளர், வனவர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட, 645 பணியிடங்களுக்கு, டி.என்.பி.எஸ்.சி சார்பில், குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் இன்று நடத்தப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் மொத்தம், 1,905 தேர்வு மையங்களில் இன்று நடைபெறும் குரூப் 2 முதல்நிலைத் தேர்வை 5.53 லட்சம் பேர் எழுதுகின்றனர். 645 பணியிடங்களுக்கான தேர்வுக்குரிய அறிவிக்கை கடந்த ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்தத் தேர்வை மொத்தம் 5,53,634 பேர் எழுதுகின்றனர். அவர்களில் 2,12,495 பேர் ஆண்கள். 3,41,114 பேர் பெண்கள். 25 பேர் மூன்றாம் பாலினத்தவர். ஒரு பணியிடத்திற்கு, 858 பேர் போட்டி யிடுகின்றனர். சென்னையில் மட்டும் 53,606 பேர் தேர்வு எழுதுகின்றனர் என்று அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
தேர்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு காலை 9 மணிக்கு முன்னரே செல்ல வேண்டும் என்றும், 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வுக் கூடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேர்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான குழுக்கள் மேற்கொண்டுள்ளன. தேர்வு நடவடிக்கைகளைக் கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வர்கள் எளிதில் தேர்வு மையத்தை அடைய ஏதுவாக, போக்குவரத்துத் துறையின் மூலம் சிறப்புப் பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அனைத்துத் தேர்வு மையங்களுக்கும் காவலர்கள் நியமிக்கப்பட்டு, தேர்வர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேர்வு நாளில் தடையின்றி மின்சாரம் வழங்க மின்வாரியத் துறைக்கும், தேர்வர்களின் உடல்நலன் கருதி உரிய மருத்துவ உதவிகள் வழங்க சுகாதாரத் துறைக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் 1,905 தேர்வு மையங்களில் இன்று நடைபெறும் குரூப் 2 முதல்நிலைத் தேர்வை 5.53 லட்சம் பேர் எழுதுகின்றனர். 9 மணி வரை தேர்வர்கள் தேர்வுக் கூடத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். 9.30 மணிக்கு தேர்வுகள் தொடங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications