புல்டோசரில் தகர்த்தால் தெரிந்துவிடும் என உளி, சுத்தியல் வைத்து சிதைக்கிறது பாஜக.. ப.சிதம்பரம் தாக்கு
சென்னை: புல்டோசரில் தகர்த்தால் வெளிப்படையாக தெரிந்துவிடும் என்பதால், உளி, சுத்தியல் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக அரசியலமைப்பை தகர்க்கிறது பாஜக என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில், தமிழ்நாடு காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில் இன்று நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம், மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவருமான அபிஷேக் சிங்வி உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.

ப.சிதம்பரம் பேசுகையில், "தேர்தலுக்கு முன்பாக 400 இடங்களில் வெற்றி பெறப்போவதாக சபதம் எடுத்தது பாஜக. அந்த சபதம் மட்டும் நிறைவேறி இருந்தால் 400 இடங்களில் பாஜக வென்றிருந்தால் அரசியல் சாசனத்தை தகர்த்து எறிந்திருப்பார்கள். புல்டோசரை கொண்டு வீடுகளை இடிப்பது போல் அரசியல் சாசனத்தை ஒரே வாரத்தில் பாஜக உடைத்திருக்கும்.
மோடி தலைமையிலான பாஜக அரசு வேறு வகையில் அரசியலமைப்பைச் சிதைக்கிறார்கள். அரசியலமைப்பை புல்டோசரில் தகர்த்தால் எல்லோருக்கும் தெரிந்துவிடும் என்பதால் உளி, சுத்தி கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தகர்க்கிறது. கடந்த ஓராண்டில் பல சட்டங்கள் மூலம் அனைத்தையும் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கிறார்கள்.
சி.ஏ.ஏ., வக்ஃபு போன்றவை அரசியல் சாசனத்தை உளி, சுத்தியல் வைத்து சிதைப்பதுதான். குடியேற்றச் சட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளார்கள், அதுவும் அரசியலமைப்பையும், தனி நபர் உரிமையையும் சிதைப்பது தான். அரசியல் சாசனத்தைச் சிதைப்பதற்கு ஒரு திட்டம் வைத்து நின்று நிதானமாக செயல்படுத்தி வருகிறார்கள்." எனக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார் ப.சிதம்பரம்.












Click it and Unblock the Notifications