ஊரடங்கு 3.0 என்ன நோக்கத்திற்காக நீட்டிக்கப்பட்டது... விளக்கம் தர வேண்டியது அரசின் கடமை -ப.சிதம்பரம்
சென்னை: ஊரடங்கு 3.0 என்ன நோக்கங்களுக்காக பிறப்பிக்கப்பட்டது என மத்திய அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊரடங்கை மூன்றாம் கட்டமாக நீட்டிக்கப்பட்டதற்கான நோக்கத்தை விளக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17-ம் தேதி முடிவடைய உள்ள நிலையில் அதற்கு பிறகு அரசு என்ன செய்யப்போகிறது என்பதையும் விளக்க வேண்டும் என ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.

ஊரடங்கு 1.0 மற்றும் ஊரடங்கு 2.0 பிறப்பிக்கப்பட்ட போது பிரதமர் மோடியே தொலைக்காட்சி வாயிலாக அவற்றின் நோக்கங்களை மக்களுக்கு சொன்னதை ப.சிதம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் இந்த முறை பிரதமர் மக்களிடம் உரையாற்றாமல் உள்துறை செயலாளர் மூலம் அறிவிக்கை மட்டும் வெளியிடப்பட்டதாக சிதம்பரம் தனது ட்வீட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் சார்பில் ப.சிதம்பரம் முன்வைக்கும் இந்த கேள்விகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கடந்த வாரம் இவர் வலியுறுத்தி இருந்த நிலையில், அதற்கான அறிவிப்பை கடந்த 2 நாட்களுக்கு முன்னர் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஊரடங்கை மூன்றாம் கட்டமாக நீட்டித்ததற்கான நோக்கத்தையும், காரணத்தையும் கேட்டிருக்கிறார் சிதம்பரம். அதுமட்டுமல்லால் ஊரடங்கிற்கு பிறகு மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்பதையும் வினவியுள்ளார். ப.சிதம்பரத்தின் டிவீட்டுக்கு பதிலடி தரும் வகையில் மத்திய அரசு தரப்பில் இருந்து விரைவில் ஊரடங்கு நீட்டிப்புக்கான நோக்கங்கள் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications