ஆமை புகுந்த வீடும்.. பாஜக நுழைந்த மாநிலமும் உருப்படாது.. ப சிதம்பரம் கடும் தாக்கு
சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை வாக்குத்திருட்டு நடைபெறவில்லை, தமிழ்நாட்டில் வாக்கு திருட்டு நடத்த முயற்சி எடுப்பார்கள், ஏனென்றால் பாஜக இங்கு நுழைந்துள்ளது, ஆமை புகுந்த வீடும் அமீனா நுழைந்த வீடும் உருப்படாது என்ற பழமொழி இருக்கிறது, அதேபோல் பாஜக நுழைந்த மாநிலமும் உருப்படாது, அதனால் வாக்கு திருட்டு விவகாரத்தில் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள கடியாப்பட்டியில் புதிய காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் திறந்து வைத்தார். பின்னர் அவர் கூறும் போது, " தமிழ்நாட்டில் இதுவரைக்கும் வாக்குத்திருட்டு நடக்கவில்லை, பீகாரில் வாக்குத்திருட்டு நடந்துள்ளது. கர்நாடகத்தில் சில தொகுதிகளில் மகாராஷ்டிராவில் பல தொகுதிகளில் வாக்குத் திருட்டு நடந்துள்ளது.

தமிழ்நாட்டிலோ கேரளத்திலோ வாக்குத்திருட்டு நடத்த முடியாது என்று நான் டெல்லியில் உத்தரவாதம் தந்திருக்கிறேன். காரணம்.. கேரளத்தில் இடதுசாரி அணி ஐக்கிய முற்போக்கு கூட்டணி என்று வலிமையான கூட்டணிகள் இருக்கின்றன. அதேபோல் தமிழ்நாட்டிலும் வாக்குத் திருட்டு நடத்த முடியாது.
ஏனென்றால் இங்கு ஒரு கிராமத்தில் யாரேனும் வெளிநபர் ஒருவர் நுழைந்துவிட்டாலோ, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று விட்டாலோ, இங்கு உள்ளவர்கள் கேள்வி எழுப்புவார்கள்.. ஆனால் பீகாரில் அப்படி கிடையாது.. அதனால்தான் அங்கு வாக்குத் திருட்டு நடக்கிறது. தமிழ்நாட்டில் திமுக கூட்டணி வலிமையாக இருக்கிறது அதேபோல் எதிர் அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது.. அதிமுக கூட்டணியும் வலிமையாக இருக்கிறது. வாக்குத் திருட்டு விவகாரத்தில் நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலும் வாக்குத்திருட்டும் முயற்சி நடக்கும். ஏனென்றால் தமிழ்நாட்டில் பாஜக நுழைந்திருக்கிறது. பாஜகவோடு கூட்டணியில் உள்ள அதிமுக வாக்குத்திருட்டை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் அவர்களோடு உள்ள பாஜகவிற்கு வேலையே வாக்குத்திருட்டுதான்
ஆமை புகுந்த வீடும் அமீனா நுழைந்த வீடும் உருப்படாது என்ற ஒரு பழமொழி இருக்கிறது அதேபோல் பாஜக நுழைந்த மாநிலமும் உருப்படாது.
அதனால் இன்னும் ஏழு எட்டு மாதத்தில் தமிழ்நாட்டில் தேர்தல் வரவுள்ளது. வாக்காளர் பட்டியல் வரும்பொழுது நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். நமக்கு அதிமுக அணியும் போட்டி அணிதான். அதில் எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை. நாமும் அதிமுக அணியினரும் ஒரு கருத்தில் உடன்பட்டு இருக்கின்றோம். பாஜகவை அவர்களிடமிருந்து கழித்து பார்த்தால், இருவருக்குமே வாக்கு திருட்டு நடக்கக்கூடாது என்பதுதான். வாக்காளர் பட்டியல் வரும்பொழுது யார் பெயரை நுழைக்கிறார்கள் யார் பெயரை நீக்கிறார்கள் என்பதை விழிப்புடன் நாம் பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் வாக்குத்திருட்டு நடக்காது என்று முழு நம்பிக்கை இருக்கிறது. ஆனால் நம்பிக்கை இருந்தால் மட்டும் போதாது அந்த நம்பிக்கைக்கு ஆதரவாக ஆதாரமாக நம்முடைய உழைப்பும் இருக்க வேண்டும். திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் விசிக கூட்டணி வலிமையாக உள்ளது. இந்த கூட்டணி தொடர்ந்து இருக்கும் அதில் ஒன்றும் சந்தேகம் வேண்டாம்... வெற்றியோ தோல்வியோ அது வேறு. நாம் தொடர்ந்து இருந்து தமிழ்நாட்டு மக்களுக்கு பாடுபடுவோம்" இவ்வாறு ப சிதம்பரம் கூறினார்.












Click it and Unblock the Notifications