விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை தோல்விக்கு..மத்திய அரசின் அகந்தையே காரணம்..ப.சிதம்பரம் கடும் தாக்கு!
சென்னை: டெல்லியில் விவசாயிகளுடன் நடைபெற்ற 7-வது சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்கு மத்திய அரசின் அகந்தையே காரணம் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.
Recommended Video

வேளாண் குடிமக்களின் கடுங்கோபத்தை எந்த அரசும் வெல்ல முடியாது. வேளாண் குடிமக்களே வெற்றி பெறுவார்கள் என்றும் ப.சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் இந்தியாவில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் தொடர்ந்து ஆதரவு குரல் எழுந்து வருகிறது.

தொடர் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் இன்று 42-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் எந்த பேச்சுவார்த்தையிலும் இதுவரை முடிவு எட்டப்படவில்லை. அடுத்து 8-ம் கட்ட பேச்சுவார்த்தை நடக்கிறது.

ஆதரவு குரல் வருகிறது
டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு, இந்தியாவின் பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. வெளிநாட்டில் இருந்தும் ஆதரவு குரல் எழுந்து வருகிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் காங்கிரஸ் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

காங்கிரஸ் கடும் எதிர்ப்பு
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி உள்ளிட்ட பல தலைவர்கள் மத்திய அரசை கண்டித்து வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகளுடன் நடைபெற்ற 7-வது சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்கு மத்திய அரசின் அகந்தையே காரணம் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் குற்றம்சாட்டி உள்ளார்.

பிடிவாதம்
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர் கூறியிருப்பதாவது:- விவசாயிகளுடன் நடைபெற்ற 7-வது சுற்றுப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததற்கு யார் காரணம், என்ன காரணம்? மத்திய அரசின் பிடிவாதமும் தன் தவறை ஒப்புக் கொள்ளவே கொள்ளாத அகந்தையுமே காரணங்கள் ஆகும் என ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

திருக்குறள் மேற்கோள் காட்டினார்
மேலும் திருக்குறளை மேற்கோள் காட்டி அவர் வெளியிட்ட மற்றோரு பதிவில் கூறியதாவது:-
''உழவினார் கைம்மடங்கின் இல்லை வாழ்வதூஉம் விட்டேம்என்
பார்க்கும் நிலை" என்பதை விரைவில் அரசு உணரும்.
வேளாண் குடி மக்களின் கடுங்கோபத்தை எந்த அரசும் வெல்ல முடியாது. வேளாண் குடிமக்களே வெற்றி பெறுவார்கள் என்று தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications