அதிமுகவுக்கு ஆதரவு.. பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்க்கு நீலம் பண்பாட்டு மையம் சப்போர்ட்! பா.ரஞ்சித் அறிவிப்பு
சென்னை: சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக திருவிக நகர் தொகுதியில் போட்டியிடும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு நீலம் பண்பாட்டு மையம் சட்டசபைத் தேர்தலில் ஆதரவு அளிப்பதாக இயக்குநர் பா.இரஞ்சித் அறிவித்துள்ளார். அதிமுக - பாஜக கூட்டணிக்கு ஆதரவு என்று அறிவிக்காமல், திருவிக நகர் தொகுதியில் போட்டியிடும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு ஆதரவு என்பதையும் விளக்கமாக கூறி இருக்கிறார்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில் தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி இணைந்திருக்கிறது. அதிமுக கூட்டணியில் அந்தக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சூழலில், அந்தக் கட்சியின் தலைவர் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் போட்டியிட உள்ளார். திருவிக நகர் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் போட்டியிடுவதாக அதிமுக சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்கிற்கு இயக்குநர் பா.இரஞ்சித் நடத்தி வரும் நீலம் பண்பாட்டு மையம் சட்டசபைத் தேர்தலில் ஆதரவு அளிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இயக்குநர் பா.இரஞ்சித் தனது எக்ஸ் பக்கத்தில், எளிய மக்கள் அரசியல் அதிகாரம் பெற வேண்டுமென்பதற்காகவும், அடித்தள மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தம் இறுதிக் காலம் வரை பணியாற்றி வந்தவர் ஆம்ஸ்ட்ராங்.
கடந்த 2024ஆம் ஆண்டு அவர் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரின் அரசியல் பணியை தொடர்ந்து முன்னெடுக்க
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியை தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங். ஆம்ஸ்ட்ராங் விரும்பிய சமூக அரசியல் பயணத்தை தொடருகிறவராகவும், அவர் கொலைக்கு நியாயம் கிடைக்க போராடுபவராகவும் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் பாதை அமைந்திருக்கிறது.
இந்நிலையில் நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திரு.வி.க நகர் (தனி) தொகுதியில், அஇஅதிமுகவுடன் கூட்டணியில் இணைந்து இரட்டை இலை சின்னத்தில் களம் காண்கிறார். ஆம்ஸ்ட்ராங் மீது அபிமானம் கொண்டவர்களுக்கான இன்றியமையாத தருணமாக இது அமைந்திருக்கிறது.
தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி முன்னெடுத்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாகவே பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தேர்தல் பங்கெடுப்பும், அதில் அவர் பெற வேண்டிய வெற்றியும் அமைந்திருக்கிறது. இந்த புரிதலோடு திரு.வி.க.நகர் தேர்தலில் போட்டியிடும் அவருக்கு நீலம் பண்பாட்டு மையம் வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துக் கொள்வதாக பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications