ஈரான் போரில் தலையை விட்ட பாகிஸ்தான்.. ட்ரம்ப் - பாக். ராணுவ தளபதி ரகசிய போன் கால்.. ஷாக் பின்னணி
சென்னை: உலகமே உற்றுநோக்கிக்கொண்டிருக்கும் ஈரான் - அமெரிக்கா மோதல் விவகாரத்தில், இப்போது ஒரு திடீர் 'ட்விஸ்ட்' அரங்கேறியிருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஜெனரல் ஆசிம் முனீருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் உரையாடியிருக்கிறார். இந்தத் தகவலை வெள்ளை மாளிகையும் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால் தற்போதைய நிலவரப்படி, இது ஒரு ஆரம்பக்கட்ட முன்னெடுப்பு மட்டுமே என்கிறார்கள் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள்.
ஏற்கெனவே மத்திய கிழக்கு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில், ட்ரம்ப் - முனீர் சந்திப்பு (தொலைபேசி வாயிலாக) பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. இது குறித்து சர்வதேச ஊடகங்கள் விரிவான செய்தியை வெளியிட்டு இருக்கிறது.

"ரகசியம்... நோ கமெண்ட்ஸ்!" - கறார் காட்டும் வெள்ளை மாளிகை
இந்த உரையாடல் குறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் பேசுகையில், "பேச்சுவார்த்தை நடந்தது உண்மைதான். ஆனால், அவை மிக மிக ரகசியமானவை (Sensitive). அதனால் விவரங்களை இப்போதைக்கு வெளியிட முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் இது குறித்துக் கூறுகையில், "இவை மிகவும் நுணுக்கமான ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள். அமெரிக்கா ஒருபோதும் ஊடகங்கள் வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தாது" என அதிரடியாகத் தெரிவித்துவிட்டார்.
மத்தியஸ்தராக மாறும் பாகிஸ்தான்?
இந்த விவகாரத்தில் பாகிஸ்தான் ஒரு முக்கியமான காய்நகர்த்தலைச் செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தத் தேவையான இடவசதி மற்றும் சூழலைத் தங்களால் ஏற்படுத்தித் தர முடியும் என பாகிஸ்தான் சிக்னல் கொடுத்துள்ளது.
ஒருபுறம் ராணுவத் தளபதி ட்ரம்ப்புடன் பேச, மறுபுறம் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியானுடன் போனில் பேசியுள்ளார். "ஈரானுக்கு நாங்கள் துணை நிற்கிறோம். பேச்சுவார்த்தை ஒன்றே தீர்வு. பதற்றத்தைத் தணிக்க பாகிஸ்தான் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கும்" என ஷெரீப் உறுதி அளித்துள்ளார்.
ட்ரம்ப்பின் 'பாஸ்' பட்டன்... ஆனால்?
ஈரானின் மின் கட்டமைப்பு வசதிகள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த ட்ரம்ப், தற்போது அந்த முடிவைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாகத் தெரிவித்துள்ளார். சில 'பயனுள்ள' உரையாடல்களுக்குப் பிறகு இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறியிருப்பது கவனிக்கத்தக்கது. ஆனால், இந்த முடிவுக்குப் பின்னால் பாகிஸ்தானின் திரைமறைவு வேலைகள் இருக்கிறதா என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.
மறுபுறம், "நாங்கள் அமெரிக்காவுடன் நேரடியாகப் பேசவில்லை" என ஈரான் பிடிவாதம் காட்டுகிறது. அதே சமயம், "சில நட்பு நாடுகள் மூலமாக அமெரிக்கா பேச்சுவார்த்தைக்குத் தூது அனுப்பிய செய்திகள் கிடைத்துள்ளன" என ஈரான் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் ஒப்புக்கொண்டுள்ளார்.
முடிவா... ஆரம்பமா?
தற்போதைய நிலவரப்படி, இது ஒரு ஆரம்பக்கட்ட முன்னெடுப்பு மட்டுமே என்கிறார்கள் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள். "இது முறையான பேச்சுவார்த்தை கிடையாது; வெறும் 'அவுட்ரீச்' (Outreach) மட்டுமே. ஒரு சுமுகமான உடன்பாடு எட்டப்பட இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கும்" என்பதே யதார்த்தம்.
ஆனாலும், ட்ரம்ப்பின் அதிரடியும், பாகிஸ்தானின் மத்தியஸ்த ஆர்வமும் இந்தப் பிராந்தியத்தில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்!












Click it and Unblock the Notifications