என்னாது திமுகவில் நான் இணைகிறேனா.. மறுக்கும் பாப்பிரெட்டிபட்டி பழனியப்பன்!
சென்னை: திமுகவில் நான் இணைய போவது இல்லை என்று முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் நடைபெற்று முடிவதற்குள் எத்தனை எத்தனை பூதம் கிளம்புமோ என தெரியவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன் தினகரனின் வலதுகரமாக செயல்பட்டு வரும் செந்தில் பாலாஜி பல்வேறு பிரச்சினைகளுக்காக தினகரனின் அமமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் நான் அமமுகவை விட்டு எங்கும் செல்லமாட்டேன் என மறுப்பு தெரிவித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். எனினும் செந்தில் பாலாஜி நாளை திமுகவில் இணையவுள்ளதாக கரூர் சின்னசாமி தெரிவித்தார்.
இது போல் தினகரன் கூடாரத்தில் இருக்கும் பழனியப்பனும் திமுகவில் இணைய போகிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பழனியப்பன் கூறுகையில், நான் திமுகவில் இணையவுள்ளதாக வெளிவந்த செய்திகள் முற்றிலும் உண்மையில்லை. அந்த எண்ணமும் எனக்கில்லை. நான் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில் இருந்து அதிமுகவின் உண்மை விசுவாசியாக உள்ளேன்.
அதைத் தொடர்ந்து சசிகலா மற்றும் தினகரனுடன் இணைந்து பணியாற்றி வருகிறேன். அமமுக கட்சியில் சிறப்பாக பணியாற்றுவதால் அதனை பொறுத்துக் கொள்ளமுடியாத சிலர் என் மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் வதந்திகளை கிளப்புகின்றனர் என்றார்.