இளம் பெண் சுபஸ்ரீக்கு இறுதி அஞ்சலி.. கண்ணீரில் மிதந்த குரோம்பேட்டை.. ஏராளமானோர் பங்கேற்பு
Recommended Video
சென்னை: பேனர் விழுந்ததால் உயிரிழந்த இளம் பெண் சுபஸ்ரீயின் உடல் குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவரது மகள் சுபஸ்ரீ (22). இவர் கந்தன்சாவடியில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று மாலை 3 மணி அளவில் வேலை முடித்து தனது ஸ்கூட்டரில் வீட்டிற்கு குரோம்பேட்டை - துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார்.
பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மகன் திருமண பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஸ்கூட்டரில் சுபஸ்ரீ வந்தபோது, சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனரில் ஒன்று, திடீர் என அவர் மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ ஸ்கூட்டியில் இருந்து தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.
அப்போது கோவிலம்பாக்கம் நோக்கி சென்ற தண்ணீர் லாரி சுபஸ்ரீ மற்றும் அவரது ஸ்கூட்டர் மீது மோதியது. லாரியின் முன்பக்கம் சிக்கிய அவரது ஸ்கூட்டர் சில மீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது. லாரியின் முன்பக்கத்தில் சிக்கிய சுபஸ்ரீயின் உடல் மற்றும் தலையின் மீது ஏறிய பிறகுதான் லாரி நின்றது. . இதில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி சுபஸ்ரீ உயிரிழந்தார்.
இந்த விபத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பலரும் சமூக வலைதளங்களில் ஆக்ரோசமாக கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார்கள். உயர்நீதிமன்றமும் பேனர் விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகளை கடுமையாக கண்டித்துள்ளது. இதையடுத்து அதிமுக, திமுக, பாமக, அமமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் பேனர் வைக்க வேண்டாம் என வலியுறுத்தி உள்ளன.
இந்நிலையில் பேனர் விழுந்ததால் உயிரிழந்த இளம் பெண் சுபஸ்ரீயின் உடல் குரோம்பேட்டை பவானி நகரில் உள்ள இல்லத்துக்கு கொண்டுவரப்பட்டது. அவருக்கு அங்கு ஏராளமானனோர் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனால் குரோம்பேட்டை கண்ணீர் மிந்தது. இதில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர். தனது ஒரே செல்லமகளான சுபஸ்ரீயை இழந்து அவரது தந்தை ரவியும் தாயும் தவித்து வருகிறார்கள்.