சென்னை பள்ளிக்கரணையில் அடுத்த அதிரடி.. சட்டென அடியோடு மாறிய ரேடியல் சாலை.. பாருங்க
சென்னை: சென்னை பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை பகுதியில் நீண்ட காலமாக போக்குவரத்து நெரிசல் இருந்து வந்தது.இந்த நெரிசலை குறைக்க சிக்னல் இல்லாமல் யூடர்ன் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதை பரிசீலித்த தாம்பரம் மாநகர போலீசார் செயல்படுத்திய திட்டம் காரணமாக இப்போது அங்கு நெரிசலே இல்லை.. அடுத்த அதிரடியாக இப்போது காமாட்சி மருத்துவமனை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றியுள்ளனர்.
சென்னை பள்ளிக்கரணை ஏரியை ஒட்டித்தான் சென்னையின் பிரபலமான அத்தனை ஐடி நிறுவனங்களும் அமைந்துள்ளன. இதன் கரையில் தான் வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, கோவிலம்பாக்கம்,துரைப்பாக்கம், பெரும்பாக்கம், பெருங்குடி என பல்வேறு பகுதிகள் உள்ளன. சென்னையில் தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதியில் இருந்து மக்கள் ஐடி நிறுவனங்களுக்கு செல்லும் சாலை என்றால் அது ரேடியல் சாலை தான்... 200 அடி சாலையான இந்த சாலையை கடந்த தான் ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு போக முடியும்.

அதேபோல் வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை பகுதி மக்கள் ஐடி நிறுவனங்கள் செல்லவும், சோழிங்கநல்லூர் செல்லவும் வேளச்சேரி 100 அடி சாலையில் கடந்து காமாட்சி மருத்துவமனை பகுதிக்கு செல்ல வேண்டும். அதை கடந்து தான் போக முடியும். இதில் காமாட்சி மருத்துவமனை பகுதியில் வேளச்சேரி பள்ளிக்கரணை பிரதான சாலையில் மேம்பாலம் இருக்கிறது. ஆனால் ரேடியல் சாலையில் மேம்பாலம் இல்லை.. இதன் காரணமாக எப்போதுமே பள்ளிக்கரணை காமாட்சி மருத்துவமனை சிக்னலில் நெரிசல் அதிகமாக இருக்கும்.

அங்கு இரவு நேரங்களிலும், காலை பீக் அவர்ஸிலும் உச்சகட்ட நெரிசல் ஏற்படும். அதை கடக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று ஐடி ஊழியர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதை ஏற்று, தாம்பரம் மாநகர காவல்துறை, பள்ளிக்கரணையில் யூடர்ன் திட்டத்தை செயல்படுத்தியது. இதன்படி தற்போது மடிப்பாக்கம் பிரதான சாலை சிக்னல் மூடப்பட்டது. அருகில் ஒரு யூடர்ன் அமைக்கப்பட்டது.

அதேபோல் பாலாஜி நகர் சிக்னலும் மூடப்பட்டது. அதன் அருகிலேயே யூடர்ன் அமைக்கப்பட்டது. அதை தொடர்ந்து பள்ளிக்கரணை சிக்னலில் மூன்று வழிகள் மூடப்பட்டன. ஒரே ஒரு சிக்னலாக மாறி உள்ளது. அதன்படி ஓஎம்ஆர் சாலையில் இருந்து ரேடியல் சாலை வழியாக வேளச்சேரிக்கு நுழைய மட்டுமே முடியும். மற்றவர்கள் சுற்றி செல்ல வேண்டும்.. அல்லது மேம்பாலத்தில் ஏறி செல்ல வேண்டும். இந்த திட்டம் காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசல் அடியோடு குறைந்துவிட்டது.
இந்நிலையில் தாம்பரம் மாநகர போலீசார் அடுத்த அதிரடியாக ரேடியல் சாலையில் காமாட்சி மருத்துவமனை பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றியுள்ளனர்.அங்கிருந்த தள்ளுவண்டி கடைகள், நடை பாதை கடைகளை அகற்றினார்கள். இதேபோல் வேளச்சேரி-பள்ளிக்கரணை பிரதான சாலையிலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல் அகற்றப்படும் ஆக்கிரமிப்புகள் மீண்டும் வராத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.













Click it and Unblock the Notifications