பஞ்சமி நில ஆக்கிரமிப்பு வழக்கு.. பாஜக புதிய தலைவர் முருகன் பதிலளிக்க ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: பஞ்சமி நிலங்களை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள தீண்டாமை வேலிகளை அகற்ற கோரிய வழக்கில், தேசிய பட்டியலின ஆணையம், அதன் துணை தலைவராகவும் இருந்தவரும் தற்போதைய தமிழக பாஜக தலைவருமான முருகன் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
திருப்பூரை சேர்ந்த அழகுமலை கிராமப்பகுதியில் உள்ள பட்டியலின மக்களுக்கு சொந்தமான 12 ஏக்கர் பஞ்சமி நிலங்களை முத்துசாமி கவுண்டர் என்ற தொழிலதிபர் ஆக்கிரமித்து அந்நிலங்களில் கல்யாண மண்டபம், மசாஜ் செண்டர்கள் அமைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதோடு பஞ்சமி நிலம், கிராமநத்தம் மற்றும் கோவில் நிலங்களோடு சேர்த்து பொதுப்பாதையும் ஆக்கிரமிப்பு செய்து தீண்டாமை இரும்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பு காவல்துறையினரிடம் புகார் அளித்தது.
காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தேசிய பட்டியலின ஆணையத்திடம் கடந்த 2018 ம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தேசிய பட்டியலின ஆணையத்தின் துணை தலைவர் முருகன், அழகுமலை கிராமத்தில் நேரில் வந்து பட்டியலின மக்கள், அருந்ததியின மக்கள் மற்றும் மற்ற சமூக மக்களிடம் தனித்தனியாக கடந்த 2019 ம் ஆண்டு ஜனவரி மாதம் ரகசிய விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணை தொடர்பாக விவரங்களை, பட்டியலின மக்களுக்கு தெரியப்படுத்தாமல், தேசிய பட்டியலின ஆணையத்தின் துணை தலைவர் முருகன்,கோவிலை பாதுகாக்கவே தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டதாக ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இவ்வாறு பஞ்சமி நில பாதுகாப்பு தொடர்பாக அரசியல் சாசனத்திற்கு விரோதமான பரிந்துரைகளை முருகன் வழங்கி இருப்பதாகவும், அதை ரத்து செய்து, பஞ்சமி நிலங்களை மீட்டு பட்டியலின மக்களிடம் ஒப்படைக்க உத்தரவிட கோரி, குணசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு ,வழக்கு தொடர்பாக தேசிய பட்டியலின ஆணையம், அதன் துணை தலைவராக இருந்தவரும், தற்போதைய தமிழக பாஜக தலைவருமான முருகன், ஆகியோர் 2வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications