"பிளான் பாண்டா".. தமிழ்நாட்டிற்காக பாஜக களமிறக்கும் பிரம்மாண்ட பிளான்.. அதே பீகார் மாடல்.. பின்னணி
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராக பையஜயந்த் பாண்டா நியமனம் செய்யப்பட்டு உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அவர் பீகார் மாடலை பின்பற்ற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாஜக தேசிய துணைத் தலைவரும், தமிழக சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளருமான பையஜயந்த் பாண்டா தலைமையிலான பாஜக குழுவினர் கடந்த அக்டோபர் 7 அன்று, அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமியை சென்னையில் உள்ள இல்லத்தில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.

பாண்டாவுடன் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் துணைத் தலைவர் ஆர்.என். ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் சென்றிருந்தனர். அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல்களுக்கான பாஜகவின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட பிறகு, பாண்டா, அதிமுக தலைவரை சந்தித்தது அதுவே முதல்முறை.
பீகார் மாடல்
தமிழக சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளராக பையஜயந்த் பாண்டா நியமனம் செய்யப்பட்டு உள்ள நிலையில் பீகாரில் பாஜகவிற்கு வெற்றியை கொடுத்த அதே மாடலை இங்கே பின்பற்ற பாஜக முடிவு செய்துள்ளதாம். பீகார் தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி (NDA) பெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது. பீகாரில் பாஜக - ஜேடியூ கூட்டணி 202 இடங்களில் வெற்றியை பெற்று உள்ளது. பாஜக 89 இடங்களிலும் , ஜேடியு 85 இடங்களிலும் வென்றுள்ளது.
பீகாரில் காங்கிரஸ் கட்சி மிக மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது. அங்கு 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ், வெறும் 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் 25 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த கூட்டணி 35 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.
பீகார் வெற்றிக்கு காரணம்
அங்கே பீகார் வெற்றிபெற காரணம் முறையாக கூட்டணி அமைத்தது. எலியும் பூனையுமாக இருந்த சிராஜ் பாஸ்வான் - நிதிஷ் குடும்பத்தை சேர்க்க காரணமாக இருந்தது பாஜக வியூகம்தான். அதேபோல் நிதிஷ் - பாஜக இடையே இருந்த கருத்து வேறுபாட்டை போக்கவும் காரணமாக இருந்தது பாஜகவின் திட்டம்.
இதே திட்டத்தை தமிழ்நாட்டில் பாண்டா களமிறக்க உள்ளதாக கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் பாஜக - அதிமுக இடையே கருத்து வேறுபாடு உள்ளது. அதேபோல் அதிமுக உள்ளேயே உட்கட்சி மோதல் உள்ளது. செங்கோட்டையன் எடப்பாடிக்கு எதிராக திரும்பி உள்ளார். அதேபோல் ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரும் எடப்பாடிக்கு எதிராக திரும்பி உள்ளனர். இந்த பிரச்சனைகளை எல்லாம் பாண்டா வரும் காலங்களில் சரி செய்வார் என்று கூறப்படுகிறது.
பீகார் பாஜக பிளான்
பீகார் தேர்தலில் NDA வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாட்டில் பாஜக பெரிய அளவிலான கட்சி விரிவாக்கத்திற்கு தயாராகி வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பல பாஜக தலைவர்களையும், வியூக நிபுணர்களையும் அடுத்த சில மாதங்களுக்கு தமிழகத்தில் கவனம் செலுத்த அறிவுறுத்தியுள்ளதாக டெல்லியில் உள்ள மூத்த தலைவர்கள் தெரிவித்தனர்.
கட்சி வட்டாரங்களின்படி, பீகார் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்ட பல முக்கிய பாஜக தலைவர்கள், இப்போது தமிழகத்திற்கு மாற்றப்படவுள்ளனர். இந்தத் தலைவர்கள் களப்பணி, வாக்குச்சாவடி மேலாண்மை, வாக்காளர் ஆலோசனை மற்றும் மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேற்பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாநிலத்தில் கட்சியின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க பாஜக முயற்சிப்பதால், வலுவான கள இருப்பு வெற்றிக்கு வழிவகுக்கும், வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்க உதவும் என்று கட்சி நம்புகிறது.












Click it and Unblock the Notifications