பாண்டிய வம்ச போராளி விஜய்? அந்த ஒரு விசயம் தப்பு: ‘குட்டி’ ஸ்டோரிக்கு அமீர் விளக்கம்
சென்னை: நடிகர் விஜய்யை பாஜக பீ டீம் என்று உடனே முத்திரை குத்த நினைப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது என்றும் அவர் திமுகவை ஏன் விமர்சித்தார் என்றும் இயக்குநர் அமீர் விளக்கம் அளித்திருக்கிறார்.
நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதை தமிழ்த் திரைப் பிரபலங்கள் பெரும்பாலும் வரவேற்று கருத்துச் சொல்லி இருக்கின்றனர். ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கூட விஜய்யை வரவேற்று ஆதரவு அளித்துள்ளார். திமுகவில் சினிமா பிரபலங்கள் பெரிய அளவில் எதிர்த்து கருத்துச் சொல்லவில்லை. போஸ் வெங்கட் மட்டும் கொஞ்சம் எதிராகக் கருத்து போட்டிருந்தார். பெரிய அளவில் ஆதரவு அளித்து வந்த சீமான், தவெக மாநாட்டில் விஜய் பேசிய பிறகு பல கருத்துகளை விஜய்க்கு எதிராக முன்வைத்து வருகிறார்.

இந்நிலையில்தான் திமுக ஆதரவாளராகக் கருதப்படும் இயக்குநர் அமீர், அவரது வாட்ஸ் அப் பதிவாக, 'பாண்டிய வம்ச போராளி வாழ்த்துகள்' என்று விஜய்க்கு வரவேற்பு அளித்துள்ளார். ஒரு காலத்தில் ரஜினிகாந்த்தைக் கட்சி தொடங்குங்கள் என்று மேடையில் கோரிக்கை வைத்தவர் அமீர். அதேபோல் சீமானை ஆதரித்து அவருடன் இயங்கியவர். பின்னர் சீமானுக்கு எதிராக மாறினார். நாதக தொண்டர்கள் அவரை டார்கெட் செய்து விமர்சித்தனர். இப்போது திமுக நிலைப்பாட்டை ஆதரித்து வரும் அமீர், 'திமுக கொள்கையைப் பின்பற்றி யாரும் கட்சி தொடங்கவே கூடாது என்று சட்டம் இருக்கிறதா என்ன?' என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இயக்குநர் அமீர் அளித்துள்ள பேட்டியில், "விஜய் தன் மாநாட்டு உரையில் பலர் எதிர்த்து நிற்கும் போது ஒரு பாண்டியநாட்டு இளைஞன் போருக்கு வந்தான் என்று ஒரு குட்டிக் கதை சொல்லி இருந்தார். அவர் வேறு யாரையும் சொல்லவில்லை மன்னன் நெடுஞ்செழியனைப் பற்றித்தான் சொன்னார். அதைவைத்து நான் 'பாண்டிய வம்ச போராளி' என்று சொன்னேன். விஜய்யின் முழுப் பேச்சைக் கேட்டேன். சிலவற்றை ரசிக்கும்படி பேசி இருந்தார். சில விசயங்கள் கொஞ்சம் அதிகமாக இருந்தன. சில உண்மைகள் இருந்தன. சில மிகைப்படுத்தல்கள் இருந்தன.
முதலில் இந்த மண்ணை சார்ந்த ஒருவர், மக்கள் செல்வாக்கு உள்ள ஒருவர் அரசியல் களத்திற்கு வந்திருக்கிறார். அதை நான் வரவேற்கிறேன். எப்போதும் என் ஆதரவு இருக்கும். முதல் மேடைப் பேச்சு என்பதால் சில குறைகள் உள்ளன. அதைப் பற்றிச் சொல்லவேண்டிய தேவையில்லை. இந்த அரசியல் களத்தில் ஒரு சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஒருவர் பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த மக்களின் பெறுவது மிகப்பெரிய சாதனை. அது ஒரு வரலாறு. இது சாதாரணமான விசயம் இல்லை.
விஜய் நடத்திய மாநாடு ஒன்மேன் ஷோ என்ற அளவில் அது வெற்றி. அதேநேரம் அது ஒரு பண்பட்ட அரசியல் மாநாடா என்று கேட்டால், அதில் பல கேள்விகள் இருக்கின்றன. விஜய் அழைப்பை ஏற்று அதற்கு வந்த தொண்டர்கள் 6 பே மரணமடைந்துள்ளன. அவர்களுக்கு மாநாட்டுப் பந்தலிலேயே அஞ்சலி செலுத்தி இருக்கவேண்டும். அதுதான் மரபு. ஏனெனில் மனித உயிர் என்பது விலை மதிக்கமுடியாதது.
விஜய் நினைத்திருந்தால் யாரை வேண்டுமானாலும் தன் கொள்கை தலைவர் என அறிமுகம் செய்து வைத்திருக்க முடியும். அவர் ஏசு நாதர் கட் அவுட் வைத்திருந்தால் கூட யாரும் அதைக் கேட்டிருக்க முடியாது. உறுதியாக நின்று பெரியார் என்கிறார். ஆகவே, அவரை எனக்குப் பிடித்திருக்கலாம். ஏனென்றால், ரஜினி தன் ரசிகர்களுக்கு யாரை அறிமுகம் செய்தார்? அதிக மக்கள் அறியாத ராகவேந்திரரை அறிமுகம் செய்தார். விஜய் அப்படிச் செய்யவில்லை. பெரியாரை, அஞ்சலை அம்மாளை அறிமுகம் செய்கிறார்.
ஒரே நாளில் தன் லட்சக் கணக்கான ரசிகர்களிடம் பெரியாரை விஜய் கொண்டு போய் சேர்த்திருக்கிறார். அது மிக முக்கியம். அவர் ஏன் கடவுள் நம்பிக்கையை ஏற்கவில்லை என்று கேட்கக்கூடாது. பெரியார் கடவுள் மறுப்பாளர் மட்டுமே இல்லை. பல கோடி மக்களின் நம்பிக்கையைச் சிதைக்க விஜய் விரும்பவில்லை. அது சரிதான். அம்பேத்கரும் பெரியாரும் இன்றைக்குத் தேவை. அதை விஜய் போன்ற பிரபலம் செய்வது மிக முக்கியம்.
உடனே சாதிவாரியாக அவர் கட் அவுட் வைத்து ஆதரவு திரட்டுகிறார் என்கிறார். அப்படி இருந்தால் அதில் என்ன தவறு. அதுவும் ஒரு அரசியல் வியூகம் தானே? மேடையில் ஒரு இஸ்லாமியப் பெண்ணை உட்கார வைக்கிறார். அதுகூட ஒரு வாக்கு அரசியல்தான். அதைப் பலரும் செய்கிறார்கள். விஜய் செய்தால் என்ன தவறு? ஒருவர் பக்வத் கீதையைக் கொடுத்தார். இன்னொருவர் பைபிள் கொடுத்தார். மற்றொருவர் குர் ஆனை வழங்கினார். மூன்றையும் விஜய் பெற்றுக் கொண்டார். அதில் என்ன பிரச்சினை? அவர் பகவத்கீதையை பின்பற்றுங்கள் என்று சொல்லவில்லையே? அதில் உள்ள வாசகத்தை மேற்கோள் காட்டிப் பேசவில்லையே?

திருமாவளவன் நடத்திய மாநாட்டில் ராஜாஜியின் கட் அவுட்டை வைக்கிறார்கள். அதைப் பார்த்தவுடன் எனக்கு கை கால் யாவும் உதறல் வந்துவிட்டது. அதே மாதிரி விஜய் ஒரு விவேகானந்தரின் கட் அவுட் வைத்திருந்தால் என்ன செய்திருக்க முடியும்? எதிர்க்கத்தானே முடியும்? அதை விஜய் செய்யவில்லையே? வரும்போதே அவரை பீ டீம் என்று சொல்வது சரியா? விஜய் தன் மீது அந்த பெயிண்டை அடித்துவிடாதீர்கள் என்று சொன்ன பிறகே பல விசயங்களைச் சொல்லி அவரை பீ டீம் ஆக நிறுவ முயல்கிறார்கள். ஒருவேளை அவர் வலதுசாரி தலைவர்களை முன் வைத்திருந்தால் என்ன நடந்திருக்கும்?
திமுகவின் கொள்கைகளை முன்வைத்து அதே மாதிரியான ஒரு கட்சி உருவாகக் கூடாது என்பது என்ன சட்டமா? வந்தால் என்ன? இப்போது திராவிட மாடல் என நேரடியாகச் சொல்கிறார். அடுத்த முறை பாஜக என விஜய் நேரடியாகப் பேசும் சூழல் வரும். அதற்குள் ஏன் அவசரப்பட வேண்டும்? அதற்கு இன்னும் காலம் இருக்கிறது? ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் விடுதலை என்று கேட்டவுடன், யார் அவர்கள் என்று சொன்னவர் மறுநாள் விளக்கம் தரவேண்டிய நிலை உருவானதா? இல்லையா? அதுபோல் விஜய்க்கு நாளை நெருக்கடி வரலாம். வரும்போது பேசுவார்.
ஊழலைச் சொல்லித்தான் அன்னா ஹசாரே வந்தார். காங்கிரஸ் ஆட்சியக் கவிழ்த்து பாஜக வந்தது. இன்றைக்கு 60 ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியிடம் இல்லாத சொத்து மதிப்பு பாஜகவிடம் இருக்கிறது. எனவே ஊழலைப் பற்றி விஜய் சொல்வது ஏதோ திமுகவுக்கு மட்டுமே உரியது அல்ல. விஜய் திமுகவை மக்கள் விரோத அரசு என்கிறார். அது சரியான வார்த்தை இல்லை. விஜய் அப்படிச் சொல்லக் கூடாது. அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. அந்த வார்த்தையை எப்படி விஜய் சொல்லமுடியும்" என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications