சென்னையில் துணிகரம்: பட்டப்பகலில் ரூ.30 லட்சம் கொள்ளை - ஒருவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்
சென்னை: சென்னை வடபழனியில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சென்னை அரும்பாக்கம் பகுதியில் உள்ள பெட் வங்கியில் ரூ.8.5 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மற்றொரு கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது.
பட்டப்பகலில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.30 லட்சத்தை மர்மநபர்கள் பறித்து சென்ற நிலையில் ஏழு கொள்ளையர்களில் ஒருவர் மட்டும் தற்போது பிடிபட்டுள்ளார்.
சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அரும்பாக்கம் பகுதியில் உள்ள ரசாக் கார்டன் பகுதியில் பெட்ரல் வங்கியின் நிதி சேவை மையமான பெட் வங்கியில் சுமார் 31.7 கிலோ தங்க நகைகள் பட்டப்பகலில் கொள்ளையடிக்கப்பட்டன. இதன் மதிப்பு சுமார் ரூ.8.5 கோடியாகும். சென்னையில் அதுவும் பட்டப்பகலில் இப்படி ஒரு கொள்ளை சம்பவம் அரங்கேறி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பின்னர் கொள்ளையர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது, சென்னையில் மற்றொரு கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. வடபழனியில் 'ஓசோன் கேப்பிட்டல்ஸ்' எனும் நிதி நிறுவனத்தில் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்நிறுவனத்தை சென்னை எண்ணூரை சேர்ந்த தீபக் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில், செவ்வாய்க் கிழமையான நேற்று நிறுவனத்தில் தீபக் மற்றும் உடன் பணிபுரியும் நவீன் என்பவரும் நிறுவனத்தில் இருந்துள்ளனர். அப்போது திடீரென உள்ளே புகுந்த ஏழு கொள்ளையர்கள் கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
இதனால் பீதியடைந்த இருவரும் என்ன செய்வதென்றே தெரியாமல் முழித்துள்ளனர். இதனையடுத்து, வேறு வழியின்றி கொள்ளையர்கள் கேட்ட பணத்தை கொடுத்துள்ளனர். சுமார் ரூ.30 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்ட கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி செல்ல முயன்றுள்ளனர். தன் கண்முன்னேயே பணம் பறிபோவதை பார்த்தும் கையறு நிலையில் இருந்த தீபக் என்ன செய்வதென்றே தெரியாமல் இருந்துள்ளார்.
கொள்ளையர்கள் வெளியேறியவுடன் தீபக் உடனடியாக பொதுமக்களின் உதவியுடன் அவர்களை பிடிக்க முயன்றுள்ளார். இதில், 7 பேர் கொண்ட கும்பலில் ஒருவர் மட்டும் சிக்கியுள்ளார். பைக்கில் தப்பிக்கும்போது பொதுமக்கள் துரத்தி பிடித்ததில் அந்த நபர் கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த நபர் வடபழனியின் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து கொள்ளையர்களிடமிருந்து பணத்தை மீட்கும் பணியை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
சென்னையில் பட்டப்பகலில் அடுத்தடுத்த நடைபெற்றுள்ள கொள்ளை சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை.. மாஸ்டர் மைண்ட் ஜிம் முருகன் கைது.. நடந்தது என்ன?