12 கோடி ஓட்டுக்கு வேட்டு வைத்த பன்னா பிரமுக்! பாஜக சதி அம்பலம்! தபால் ஓட்டுக்கும் பூட்டு?
சென்னை: கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான 12கோடி வாக்குகள் திட்டமிட்டு நீக்கப்பட்டன என்பதை அம்பலப்படுத்தி இருக்கிறார் மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்.
சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாகத் தேர்தல் அதிகாரி ஈடுபட்டுள்ளார் என்பதால் அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்று அதிரடியான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி இருந்தது.

நாடு முழுவதும் இந்தத் தீர்ப்பு பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது. இந்நிலையில் பாஜகவில் செயல்பட்டு வரும் பன்னா பிரமுக் படை 12 கோடி வாக்காளர்களின் பெயரைப் பட்டியலிலிருந்து நீக்கி மோசடியில் ஈடுபட்டுள்ளது என்ற தகவலை வெளியிட்டுள்ளார் பத்திரிகையாளர் அய்யநாதன்.
யார் இந்தப் பன்னா பிரமுக்? அவர்களுக்கும் பாஜகவுக்கும் என்ன தொடர்பு? மிக விளக்கமாகப் பேசினார் அய்யநாதன்.
"மொடக்குறிச்சி தொகுதியில் பதிவான தபால் வாக்குகளில் ஒரே போன் நம்பர் எழுதிச் செல்லாத ஓட்டுகள் என்று அறிவித்துவிட்டார்கள். வந்த தபால் ஓட்டுகள் அனைத்தும் சுப்புலக்ஷ்மி ஜெகதீசனுக்கு ஆதரவாக விழுந்தவை.

இதைப்போன்ற ஒரு திருட்டுத்தனம் தமிழ்நாட்டிலேயே நடந்துள்ளது. அரசு ஊழியர்கள் எனச் சொல்லக்கூடிய சம்பள அடிமைகள் செய்யக் கூடியவை காரியங்கள் இவை. அதைப்போல சண்டிகரிலிருந்தவரும் அரசு ஊழியர்தானே? அவர்தானே விழுந்த ஓட்டுகளைச் செல்லாது எனச் சொன்னவர்?
ஒருவர் தபால் ஓட்டைப் பதிவு செய்யும்போது அவரது போன் நம்பர் வைத்துத்தான் பதிவு செய்ய முடியும். அப்படிப் பதிவு செய்யும் போது தேர்தல் அதிகாரியாக இருந்த ஒருவர் சுப்புலக்ஷ்மி ஜெகதீசனுக்கு வந்த அத்தனை ஓட்டுகளையும் ஒரே போன் நம்பரில் பதிவு செய்து அதைச் செல்லாதவையாக ஆக்கிவிட்டார் ஒரு அதிகாரி.
இது அப்போதே பிரச்சினையாக வெடித்தது. அப்படி சுப்புலக்ஷ்மியை காலி செய்துவிட்டு, அங்கே பாஜக வென்றதாக அறிவித்துவிட்டனர். இதைப் போலத்தான் நாடு முழுவதும் பாஜக மோசடி செய்து வருகிறது.

ஆனால், ஸ்டாலின் சுப்புலக்ஷ்மி ஜெகதீசன் சரியாக வேலை செய்யவில்லை என்று நினைத்துவிட்டார். ஆனால், அவரை பாஜக சூழ்ச்சி செய்து அங்கே வெற்றிபெறவிடாமல் தடுத்துவிட்டது. அதுதான் உண்மை.
நீங்களே சொல்லுங்கள் திமுகவை மொடக்குறிச்சி தொகுதியில் திமுகவை தோற்கடிக்க முடியுமா? சுப்புலக்ஷ்மி ஜெகதீசன் வெற்றி பெற்றுவந்தால், அவரை சபாநாயகராக ஆக்க வேண்டும் என்று திமுக திட்டம் போட்டிருந்தது.
அவர் தொகுதியில் உள்ள திமுகவினர் சில சுப்புலக்ஷ்மி ஜெகதீசன் எதிராக உள்ளடி வேலைசெய்தார்கள். அதையும் மறுக்க முடியாது. ஆனால், அந்த அதிகாரி நேர்மையாக நடந்து கொண்டாரா? அதுதான் நாம் எழுப்ப வேண்டிய முக்கியமான கேள்வி.

ஒரு ஓட்டு செல்லாததாக இருந்தால் அது வாக்காளரால் செய்த தவறால் நடந்திருக்க வேண்டும். ஆனால், பாஜக ஆட்சியில் அதிகாரிகளே அதைச் செய்கிறார்கள்.
கடந்த தேர்தலில் பாஜக 37% வாக்குகளைக் கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து பெற்றது. இந்த முறை 50% வாக்குகளை நாம் பெற்றாக வேண்டும் என்று மோடி சொல்கிறார். கடந்த முறை 22 கோடி பேர் பாஜகவுக்கு ஓட்டுப் போட்டுள்ளார்கள். பதிவான வாக்குகள் 60 கோடி.
அதில் பாஜகவுக்கு வெறும் 22 கோடிதான். 38 கோடி வாக்குகள் மோடிக்கு எதிராக விழுந்துள்ளன. எப்படி 50% வாக்குகளை பாஜக எப்படிப் பெற முடியும்? அதற்கும் மோடி பதில் சொல்கிறார். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலிருந்தும் 370 வாக்குகளைப் பெற வேண்டும் என்று கட்சியினருக்குக் கட்டளைப் போடுகிறார்.

தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது? ஒரு வாக்குச்சாவடிக்கு மொத்தம் 800 வாக்குகள்தான் என்கிறது. அதில் 370 வாக்குகள் பாஜகவுக்கு விழவேண்டும் என்கிறார் மோடி.
ஒரு பூத்துக்கு 800 வாக்குகள் இருந்தாலும், விழும் ஓட்டுகளின் எண்ணிக்கை என்னவோ சுமார் 550 வரைதான். அதில் 370 பாஜகவுக்கு வர வேண்டும் என்றால், பிறகட்சிகளுக்கு எத்தனை ஓட்டுகள் போகும்?
பாஜக சார்பாகத் தேர்தல் வாக்காளர் சீட்டுகளை ஒருங்கிணைக்கும் வேலைகளைச் செய்பவர்களுக்கு பன்னா பிரமுக் என்று பெயர். இதை நான் சொல்லவில்லை. மோடி சொல்லி இருக்கிறார்.
அவர்கள் என்ன செய்வார்கள் என்றால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் உள்ள வாக்காளர் பட்டியலைச் சரி பார்ப்பார்கள். அதில் பாஜகவுக்கு வாக்கு அளிக்கமாட்டார்கள் என உறுதியாகத் தெரிந்தால், அந்த நபர்களின் பெயரை நீக்கிவிடுவார்.

பேசி அந்த ஓட்டுகளைப் பெறமுடியும் என்றால், 'இந்த நாடு இந்து நாடாக இருக்க வேண்டும் என்றால் பாஜகவுக்கு ஓட்டுப் போடுங்கள்' என்று மூளைச்சலவை செய்வார்கள். இந்த மாதிரியான பிரச்சாரத்தைத்தான் உத்திரப் பிரதேசத்தில் செய்தார்கள்.
இதற்கும் மசியாதவர்களின் வாக்குகளைத் தேர்தல் ஆப் மூலம் காலி செய்துவிடுகிறார்கள். ஒருவர் தன்னை வாக்காளராகச் சேர்த்துக் கொள்வதற்காகத் தேர்தல் ஆணையம் ஆப் தயாரித்து அளித்துள்ளது. அதில் இந்த பன்னா பிரமுக் என்பவர்கள் நுழைந்து பாஜக அல்லாதவர்களின் வாக்குகளை நீக்கி விடுகிறார்கள். இதைப் பற்றி நான் புத்தகமே எழுதி இருக்கிறேன்.
இந்தப் பன்னா பிரமுக் என்பவர்கள் கடந்த தேர்தலில் மட்டும் 12 கோடி வாக்காளர்களை இப்படி நீக்கி இருக்கிறார்கள். அதில் 4 கோடி பேர் முஸ்லிம். 2 கோடி பேர் பட்டியலினத்தவர். 2 கோடி பேர் பெண்கள்.
மற்றவர்கள் எல்லோரும் பல வகுப்பினர். குறிப்பாக பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கும் சாதியினர். அவர்களை அனைவரையும் வாக்காளர் பட்டியலிலிருந்து தூக்கி விட்டார்கள்.

இப்படிக் கடந்த தேர்தலின் போது கன்னியாகுமரியில் கிட்டத்தட்ட 42 ஆயிரம் பேருக்கு வாக்கு இல்லை. அது குறித்து வழக்குப் போட்டுள்ளார்கள். அது குறித்து வந்த தீர்ப்பு என்ன சொல்லியுள்ளது தெரியுமா? தெரியாது இல்லையா? ஏனென்றால் இதுவரை தீர்ப்பே வரவில்லை.
ஜனவரி மாதம் அந்த மக்கள் அனைவருக்கும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தது. மார்ச் அல்லது ஏப்ரல் தேர்தலின் போது வாக்களிக்கப் போனால் ஓட்டு இல்லை எனச் சொல்லி அனுப்பிவிட்டார்கள். இப்போது புரிகிறதா இந்த பன்னா பிரமுக் என்பவர்கள் யார் என்பது?" என்று ஷாக் கொடுக்கிறார்














Click it and Unblock the Notifications