பந்தாடப்படும் பண்ருட்டி ராமச்சந்திரன்.. எத்தனை நாளைக்கு என தெரியாத ஒரு பதவி.. ஏற்பாரா, மறுப்பாரா?
சென்னை: தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான பண்ருட்டி ராமச்சந்திரன், முதுமை காலத்தில் அதிமுகவின் அதிகாரப்போட்டியில் வசமாக சிக்கிக் கொண்டிருக்கிறார். அதிமுகவில் எதுவும் நிலையானது இல்லை என்கிற தற்போதைய நிலையில் ஓபிஎஸ் கோஷ்டி அறிவித்துள்ள அரசியல் ஆலோசகர் என்ற பதவியை பண்ருட்டி ராமச்சந்திரன் ஏற்கத்தான் போகிறாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
அண்ணா காலத்து அரசியல்வாதி.. எம்ஜிஆரின் தளபதி என்றெல்லாம் அரசியலில் சரித்திரம் படைத்தவர் பண்ருட்டி ராமச்சந்திரன். காலம் செய்த கோலம் அவருக்கும்தான் எத்தனை எத்தனை பின்னடைவுகள்.
அண்ணா காலத்தில் அரசியலைத் தொடங்கி கருணாநிதி, எம்ஜிஆர் அமைச்சரவையில் இடம்பெற்று பின்னர் டாக்டர் ராமதாஸ் தலைமை ஏற்று பாமகவில் இணைந்தார். ஒரு கட்டத்தில் தனிக்கட்சி தொடங்கி அது கரைசேராமல் போக நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவுக்குப் போய் அவமானப்படுத்தப்பட்டு அதிமுகவுக்கே திரும்பினார்.

சசிகலா தலைமைக்கு ஜே
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவரது உதவியாளராக இருந்த சசிகலாவின் தலைமையை ஏற்போம் என அதிமுக தலைகள் சரண கோஷம் பாட, அய்யா பண்ருட்டியாரும் அச்சரம் பிசகாமல் ஜோதியில் ஐக்கியமானார். அப்போதே அவரது இந்த நிலைப்பாடு கடுமையான விமர்சனங்களுக்குள்ளானது. பின்னர் சிறிது காலம் ஒட்டு மொத்தமாக அரசியலில் இருந்தே விலகியே நின்றிருந்தார்.

பண்ருட்டி ராமச்சந்திரன்
இப்போது அதிமுகவின் உட்கட்சி மோதலில் சிக்கி சிதைந்து கொண்டிருக்கிறார் பண்ருட்டியார்தான். அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா கோஷ்டிகள் என பிளவுகள் வெடித்து வீதியில் நிற்கின்றன. இதில் சசிகலா கோஷ்டியும் ஓபிஎஸ் கோஷ்டியும் பண்ருட்டியை தூக்கி வைத்து கொண்டாடுகின்றன. பண்ருட்டியாரும், இபிஎஸ் கோஷ்டியை வசமாக வசைபாடி வருகிறார்.

எடப்பாடியின் காட்டமான விமர்சனம்
இதனால்தான், ஒரு கிளை கழக செயலாளருக்கும் இருக்கும் தகுதி கூட உங்களுக்கு இல்லை.. நீங்க அறிவுரை வழங்கிய கட்சிகள் எல்லாம் ஒண்ணும் இல்லாமல் போய்விட்டது. எங்களை ஏற்றுக்கொண்டால் அதிமுகவில் தொடருங்கள், மனமில்லை என்றால் புறம் பேசாதீங்க என டோஸ் விட்டார் எடப்பாடி பழனிசாமி. இவ்வளவு மோசமான விமர்சனங்களை பண்ருட்டி ராமச்சந்திரன் தன் வாழ்நாளில் எதிர்கொண்டிருக்கமாட்டார்தான்.

அரசியல் ஆலோசகர் பதவி
இந்த களேபரங்களுக்கு மத்தியில்தான் அதிமுக அரசியல் ஆலோசகர் என பதவியை பண்ருட்டிக்கு வாரிக் கொடுப்பதாக அறிவித்துள்ளார் ஓபிஎஸ். அவரது ஒருங்கிணைப்பாளர் பதவியே செல்லுமா? செல்லதா? அவருக்கு அதிமுகவில் எதிர்காலம் இருக்கிறதா? அதிமுகவில் அவருக்கு முடிவுரை எழுதிவிட்டால் அரசியலில் அவர் என்னவாக இருப்பார்? என்பதெல்லாம் புரியாத புதிர்தான்.. அவரது முகாமுக்கே வயிற்றில் நெருப்புதான்.. அப்படியான சூழ்நிலையில் பண்ருட்டியாருக்கு அரசியல் ஆலோசகர் பதவி என அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார் ஓபிஎஸ். இந்த பதவியால் கிஞ்சித்தும் எதுவும் நடக்கப் போவது இல்லை என்பதை அரசியல் அனுபவம் வாய்ந்த பண்ருட்டியார் அறியாததும் இல்லை. அதனால் இப்போதைய சூழலில் எப்படியும் காலவதியாகப் போகும் ஒரு பதவியை ஏற்காமல் இருப்பதுதான் பண்ருட்டியார் போன்றோருக்கு மரியாதையை தரும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications