பரந்தூர் விமான நிலையம்.. 1,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.. டி.ஆர்.பாலு கொடுத்த அப்டேட்!
சென்னை: பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்காக இதுவரை 1,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக திமுக எம்பி டிஆர் பாலு தெரிவித்துள்ளார். தனியார் வசம் உள்ள 2,400 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக கூறிய டிஆர் பாலு, சென்னை விமான நிலைய விரிவாக்கத்திற்கு சுற்றி உள்ள கையகப்படுத்தப்படாது என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னை விமான நிலைய விரிவாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் மீனம்பாக்கத்தில் உள்ள அதன் வளாகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் விமான நிலைய ஆலோசனைக் குழு தலைவர் டிஆர் பாலு, விமான நிலைய இயக்குநர் ராஜா கிஷோர், எம்எல்ஏ-க்கள் ராஜா, கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பயணிகள் போக்குவரத்து, சரக்குகள் கையாள்வது குறித்தும், தர மேம்பாடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதன்பின் விமான நிலைய ஆலோசனைக் குழு தலைவர் டிஆர் பாலு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு ஏராளமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மாநகரப் பேருந்துகள் விமான நிலையம் உள்ளே வந்து பயணிகளை ஏற்றி செல்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த வசதி வேறு எந்த மாநிலத்திலும் இல்லை.
விரைவில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் வரவுள்ளது. அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழக்கி இருக்கிறது. அந்த விமான நிலையம் வந்தால், சென்னையில் வாகன நெரிசல் தவிர்க்கப்படும்.
பரந்தூர் விமான நிலையம் அமைக்க மொத்தமாக 5,700 ஏக்கர் நிலையம் தேவையாக உள்ளது. அதில் தமிழக அரசுக்கு சொந்தமாக 2 ஆயிரம் ஏக்கர் உள்ளது. தனியார் வசம் 3,700 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் இருந்து இதுவரை 1,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த மாதத்தில் ஆயிரம் ஏக்கர் வரை கையகப்படுத்தப்பட்டிருந்த சூழலில், ஒரு மாதத்தில் 300 ஏக்கர் கூடுதாக பெறப்பட்டுள்ளது.
இதனால் மீதமுள்ள 2,400 ஏக்கர் நிலத்தை வாங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்னரே, அடுத்தக் கட்ட பணிகள் தொடங்கப்படும். அதேபோல் சென்னை விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக அருகில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்பாடாது. மேலும் சென்னை விமான நிலையத்தில் இருந்து உள்நாட்டு விமான சேவையில் தமிழில் அறிவிப்பு செய்யப்படுவது குறித்து கேட்டறிந்தோம். இனி தமிழில் முறையாக அறிவிப்பு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications