அன்னூருக்கு கிடைத்த நியாயம் பரந்தூருக்கு எப்போது? மீண்டும் விஸ்வரூபமாகும் விமான நிலைய விவகாரம்!
சென்னை: கோவை அன்னூரில் விவசாயிகள் அனுமதி இல்லாமல் விளைநிலங்கள் கையகப்படுத்தமாட்டாது என தமிழக அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து பரந்தூர் விமான நிலைய விரிவாக்கத்துக்கான நிலம் கையகப்படுத்தும் விவகாரமும் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வருகை மற்றும் சரக்குகள் கையாளும் நிலை அதிகரித்து வருவதை கணக்கில் கொண்டு இரண்டாவது பசுமை விமான நிலையம் உருவாக்க திட்டமிடப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில்,காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதி தேர்வு செய்யப்பட்டு பரந்தூரையொட்டி உள்ள 13 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் இந்த அறிவிப்பு அப்பகுதியை சேர்ந்த கிராம மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இப்பகுதியில் உள்ள நீர்நிலைகள், விவசாய நிலங்கள், குடியிருப்பு பகுதிகள் என 4800 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படுவதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏகனாபுரம், பரந்தூர் உள்ளிட்ட 13 கிராம பொதுமக்கள் தொடர்ந்து 145 வது நாட்களாக இரவு நேர அடையாள போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோட்டை நோக்கி பேரணி என அறிவித்த நிலையில் இரு தமிழக அமைச்சர்கள் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அந்த நிகழ்வை கைவிட்டனர்.

நடைபயணம்
மேலும் அப்பகுதியில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாத வண்ணம் இருக்க காவல்துறை 13 சோதனை சாவடிகளை அமைத்து நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு பணியையும் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நாளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை நேரில் சந்தித்து மனு அளிக்க நடைபயணம் மேற்கொள்வதற்கு காவல்துறையினரிடம் பரந்தூர் விமான நிலைய மீட்பு ஒருங்கிணைப்புக் குழு அனுமதி கேட்டனர்.

ஆட்சியர் பேச்சுவார்த்தை தோல்வி
இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திலுள்ள கூட்டரங்கில் பரந்தூர் விமான நிலைய மீட்பு ஒருங்கிணைப்புக் குழுவினருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அரசிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியும், பரந்தூர் விமான நிலைய மீட்பு ஒருங்கிணைப்புக் குழு அதனை ஏற்க மறுத்தால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

திட்டமிட்டபடி போராட்டம்
இதன் பின் பரந்தூர் விமான நிலைய மீட்பு ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் இளங்கோ செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13கிராமங்களில் விளைநிலங்கள், நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புகளை அகற்றக் கூடாது என தொடர்ச்சியாக தமிழக அரசை வலியுறுத்தி வருகிறோம். நாளை நடைபெறும் நடைபயணம் போராட்டத்தை கைவிடுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டதும், அதற்கு மறுப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளோம்.

அன்னூருக்கான நியாயம் எங்களுக்கு எப்போது?
கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர், அன்னூர் பகுதியில் விவசாயிகள் அனுமதியின்றி விளைநிலங்கள் எடுக்கப்படாது என தெரிவித்தார். ஆனால் பரந்தூரில் மட்டும் விதிவிலக்கு இல்லையா? விமான நிலையம் அமைக்க நீர்நிலைகள்,விளைநிலங்களை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம். நாளை கண்டிப்பாக நடைபயணம் மேற்கொண்டு மாவட்ட ஆட்சியரை சந்தித்து எங்களது கோரிக்கையை நேரடியாக அளிப்போம். இவ்வாறு இளங்கோ கோரினார்.












Click it and Unblock the Notifications