"பராசக்தி" தலைப்பை பயன்படுத்த கூடாது.. ரியல் தயாரிப்பாளர் ட்விஸ்ட்.. தொடரும் டைட்டில் பஞ்சாயத்து!
சென்னை: இறுதிச்சுற்று, சூரரைப் போற்று படங்களை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் இணைந்து நடிக்கும் திரைப்படம் பராசக்தி. இதன் அறிமுக டீசர் வீடியோ நேற்று சோசியல் மீடியாவில் வெளியாகியது. "சேனை ஒன்று தேவை” என்று ஆவேசமாக சிவகார்த்திகேயன் பேசிய காட்சி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.
அதேபோல் ”தீ பரவட்டும்” என்ற வாசகமும் படக்குழுவினர் பதிவிட்டு வீடியோவை பகிர்ந்தனர். இதன் மூலமாக தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து பராசக்தி படம் உருவாகுவதாக தெரிய வந்தது. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் மற்றும் ரெட் ஜெயிண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

பராசக்தி என்று தலைப்பிட்டதால், அரசியல் கட்சியினர் மத்தியில் இதன் போஸ்டர்கள் கவனத்தை பெற்றது. ஏனென்றால் 1952ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வசனத்தை சிவாஜி கணேசனின் அறிமுகத் திரைப்படம் தான் பராசக்தி. இன்றளவும் நீதிமன்றக் கூண்டில் நின்று சிவாஜி கணேசன் பேசிய வசனங்கள் அவ்வளவு எளிதாக யாராலும் மறக்க முடியாது.
சமூகநீதி கருத்தியலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட அந்த திரைப்படம், அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. 72 ஆண்டுகளை கடந்தாலும் பராசக்தி திரைப்படம் இன்றளவும் பல்வேறு தரப்பினராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் பராசக்தி படத்தின் டைட்டில் குறித்த விவாதங்கள் எழுந்தன. இன்னொரு பக்கம் சில பஞ்சாயத்துகளும் எழுந்தன.
விஜய் ஆண்டனி நடிப்பில் சக்தித் திருமகன் என்ற படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு பராசக்தி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்த சான்றிதழையும் விஜய் ஆண்டனி வெளியிட்டார். இதன்பின் சிவாகார்த்திகேயன் படத்தின் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனியை சந்தித்து பேசினார்.
இதன் காரணமாக சிவகார்த்திகேயன் படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு பராசக்தி டைட்டில் விட்டுக் கொடுக்கப்பட்டது. அதேபோல் ஏவிஎம் நிறுவனம் மற்றும் சிவாஜியின் குடும்பத்தினரும் பராசக்தி டைட்டியலை வழங்குவதாக வாழ்த்து கூறி கடிதம் வெளியிட்டனர். இதற்கு படக்குழுவும் நன்றி தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் மீண்டும் பராசக்தி டைட்டிலில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 1952ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படத்தை நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்திருந்தது. தற்போது நேஷனல் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் கருணாநிதி வசனத்தில் சிவாஜி கணேசன் நடித்த திரைப்படம் பராசக்தி.
இந்த படத்தை நேஷனல் பிக்சர்ஸ் சார்பில் எங்கள் தாத்தா பெருமாள் முதலியார் தயாரித்திருந்தார். ஏவிஎம் நிறுவனம் சில ஏரியாக்களின் விநியோக உரிமையை மட்டுமே பெற்றிருந்தது. பொன்விழா, வைரவிழா கண்டிருக்கும் இந்த பராசக்தி படம், 100 ஆண்டுகள் ஆனாலும் தாக்கம் குறையாது. விரைவில் வெள்ளி விழா காண இருக்கும் பராசக்தி படத்தை நாங்கள் டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி வெளியிட திட்டமிட்டு வருகிறோம்.
அதனால் எங்களுக்கு முழு உரிமை உள்ள பராசக்தி திரைப்படத்தின் டைட்டிலை வேறு யாரும் தங்களுடைய திரைப்பட தலைப்பாக பயன்படுத்துவதை தவிர்த்திட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டான் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் நேஷனல் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications