சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் காரை பார்க்கிங் பண்ண போறீங்களா.. மறந்தும் இந்த தப்பு பண்ணிடாதீங்க
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காரை நிறுத்திவிட்டு வேலூர் காட்பாடிக்கு சென்று வந்துள்ளார் ஒருவர். அவர் காரை பாரக்கிங் செய்ததற்காக 34 மணி நேரத்திற்கு ரூ.1,585 பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை பார்த்தது பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். ஏனெனில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பார்க்கிங் இவ்வளவு காஸ்ட்லியா என்று விமர்சிக்கிறார்கள். ஆனால் எதார்த்தம் என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் தமிழ்நாட்டின் மிக முக்கியமான ரயில் நிலையம் ஆகும். இங்கிருந்துதான் மேற்கு மாவட்டங்களுக்கும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் ரயில்கள் சென்று வருகின்றன. இங்கு எப்போதுமே கூட்டம் அதிகமாக இருக்கும். மிகவும் பரபரப்பான ரயில் நிலையம் ஆகும்.

50 ரூபாய் கட்டணம்
சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வருபவர்கள் பார்க்கிங் வெளியில் விட்டுவருவார்கள். ஏனெனில் கார்கள் பார்க்கிங் என்பது குறுகிய கால பார்க்கிங் மட்டுமே இருக்கிறது. ஒருமணி நேரத்திற்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இரு சக்கர வாகனங்களுக்கு பிரச்சனை இல்லை. கார்களுக்கு இந்த அளவிற்கு கட்டணம் வசூலிக்க காரணம். அங்கு பெரிய அளவில் பார்க்கிங் வசதி இல்லை.. அதுமட்டுமின்றி, மிகவும் கூட்ட நெரிசல் மிகுந்த இடம் என்பதால் பார்க்கிங்கை பல நாட்கள் செய்ய அனுமதிப்பது இல்லை.. எனவே அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுபற்றி பலருக்கும் தெரிவது இல்லை.
1585 ரூபாய் பார்க்கிங் கட்டணம்
சென்னையில் வசிக்கும் ஒருவர், காட்பாடி செல்வதற்காக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் புறப்பட்டு சென்றுள்ளார். அவர் மறுநாள் மீண்டும் சென்னை திரும்பும் திட்டம் வைத்திருக்கிறார். அதற்காவே தனது காரை சென்ட்ரல் ரயில் நிலைய வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி இருந்தார். மறுநாள் அவர், காரை பார்க்கிங்கில் இருந்து வெளியே எடுத்தார். அப்போது அவருக்கு கட்டணமாக ரூ.1,585 செலுத்த வேண்டும் என்று வந்துள்ளது அதனை கண்டு காரின் உரிமையாளர், அதிர்ச்சி அடைந்தார்.
பணத்தை தந்தார்
அங்கு இருந்த பார்க்கிங் தொழிலாளர்களிடம் வாக்குவாதம் செய்தார். ஆனால் அவர்கள் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது. பில்லில் என்ன தொகை வருகிறதோ, அதனை கட்டாயம் செலுத்த வேண்டும். அப்போதுதான் காரை எடுக்க விடுவோம் என்று கூறிவிட்டார்கள், அதனால் அவர் வேறு வழியில்லாமல் பணத்தை செலுத்திவிட்டு காரை எடுத்துச் சென்றார்.
ரயில்வே அதிகாரி விளக்கம்
பின்னர் இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அனைவரும் அதை 'டேக்' செய்து, ரயில்வே நிர்வாகத்தை திட்டி தீர்த்து வருகின்றனர். இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஒரு மணி நேரத்துக்கு பார்க்கிங் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும். ஆனால் 34 மணி நேரம் அவர் நிறுத்தியதற்கு சலுகை கட்டணம் தான் ரூ.1,585. உண்மையில் ஒரு மணி நேரத்துக்கு ரூ.50 என்றால் 34 மணி நேரத்துக்கு கட்டணம் ரூ.1,700 கட்டணம் ஆகும்.
நீண்ட நேரம் நிறுத்தவே கூடாது
சென்ட்ரல் நிலையத்தில் உள்ள பார்க்கிங் வசதிகள் குறுகிய நேர பார்க்கிங் வசதிக்கு மட்டுமே நன்றாக இருக்கும். நீண்ட நேரம் நிறுத்தினால் அதிக தொகை தான் கட்டணம் வரும்" என்று கூறினார். லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சொந்த காரில் செல்வதற்கு மெட்ரோவில் செல்லலாம் அல்லது கால் டாக்ஸி மற்றும் ஆட்டோவில் செல்லலாம். ஏனெனில் அனைவரும் அங்கு காரை நீண்ட நேரம் நிறுத்தினால் வாகன நெருக்கடி ஏற்படும். எனவே தான் அங்கு பார்க்கிங் கட்டணம் அதிகமாக இருக்கிறது .












Click it and Unblock the Notifications