4 மணி நேரத்தில் நாகை டூ காங்கேசன் துறை! பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று முதல் மீண்டும் தொடக்கம்
சென்னை: நீண்ட நாட்களுக்கு பின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு இன்று முதல் பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படுகிறது. நாகையிலிருந்து வெறும் 4 மணி நேரத்தில் காங்கேசன் துறைமுகத்தை இந்த பயணிகள் கப்பல் சென்றடைகிறது.
இந்தியா இலங்கை இடையே நல்லுறவை ஏற்படுத்தும் விதமாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி செரியாபாணி என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் இரு நாட்டுக்கு இடையில் இயக்கப்பட்டது. ஆனால் வடகிழக்கு பருவ மழை காரணமாக, அதே மாதம் 23ம் தேதியுடன் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இது இரு நாட்டு பயணிகளுக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. நிறுத்தப்பட்ட கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று இருநாட்டு தரப்பும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

இதன் விளைவாக நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு 'சிவகங்கை' என்ற பெயர் கொண்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று முதல் தொடங்குகிறது. இன்று காலை 10 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இயக்கப்படும் இந்த கப்பல், காங்கேசன் துறைக்கு மதியம் 2 மணிக்கு செல்லும்.
மீண்டும் நாளை காங்கேசன் துறையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு 2 மணிக்கு வந்து சேரும். வருகிற 18ம் தேதி காலை 8 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து புறப்படும் பயணிகள் கப்பல் காங்கேசன் துறைக்கு மதியம் 12 மணிக்கு சென்றடையும். அதே நாள் மதியம் 2 மணிக்கு காங்கேசன் துறையில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகம் வந்தடையும். இதைத்தொடர்ந்து இரண்டு மார்க்கத்திலும் பயணிகள் கப்பல் சேவை நடைபெறும்.
கப்பல் போக்குவரத்து குறித்து நிர்வாக இயக்குநர் நிரஞ்சன் கூறுகையில், "கப்பலில் பயணிக்க www.sailindsri.com என்ற இணையதள முகவரியில் கடந்த 12ம் தேதி நள்ளிரவு முதல் முன்பதிவு தொடங்கியுள்ளது. பயணிகளின் சிரமம் இல்லாமல் பயணிக்க அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. 123 சாதா இருக்கைகளும், 27 பிரீமியம் இருக்கைகளும் என மொத்தம் 150 இருக்கைகள் உள்ளது. ஒருவழி பயணத்திற்கு பிரிமியம் இருக்கைக்கு ஜிஎஸ்டியுடன் ₹7 ஆயிரத்து 500ம், சாதா இருக்கைக்கு ₹5 ஆயிரம் ஜிஎஸ்டியுடன் சேர்த்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் 25 கிலோ எடை கொண்ட லக்கேஜ் மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படும்.
அதேபோல அனைத்து பயணிகளுக்கும் லைப் ஜாக்கெட் வழங்கப்படும்.சிவகங்கை கப்பல் பயணம் இந்தியா- இலங்கை இடையே நல்லுறவுக்கான பாலமாக இருக்கும். கப்பலில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு 3 மணி நேரத்திற்கு முன்னதாக வருகை தர வேண்டும். அனைத்து சோதனைகளும் முடிந்த பின்னர் பயணிகள் கப்பலில் ஏற்றப்பட்டு பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படும்" என்று தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications