வீக்கெண்ட்ல டிக்கெட் ரேட் எகிறுது.. இந்த திட்டத்தை விடாம தொடரணும்.. அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை!
சென்னை: தமிழ்நாட்டில் இந்த வாரஇறுதி நாட்களில் பயணிகளின் வசதிக்காக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. வீக்கெண்ட் நாட்களில் எப்போதுமே அதிகளவிலான பயணிகள் வெளியூர்களுக்குச் செல்வதால் போதிய பேருந்துகள் இல்லாத நிலையில், தனியார் பேருந்துகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன. எனவே, வார இறுதி நாட்களில் கூடுதல் பேருந்து சேவையை அரசு இனி எல்லா வாரமும் தொடர வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இன்றும் நாளையும் வார இறுதி விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து தமிழ்நாட்டின் முக்கிய இடங்களுக்கு கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகள், கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சேலம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் இருந்து 300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

வீக்கெண்டில் நிரம்பி வழியும் கூட்டம்: சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் வார இறுதி வந்துவிட்டாலே பேருந்து நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவது வாடிக்கை. சனி, ஞாயிறு என இரண்டு நாட்கள் விடுமுறையை கழிக்க சொந்த ஊர் அல்லது வெளியூர்களுக்கு அதிகமானோர் பயணம் செய்வதால், பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழியும்.
சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் இரவு நேரத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். அரசுப் பேருந்துகளில் டிக்கெட் நிரம்பிவிடுவதால், தனியார் பேருந்துகள் கட்டணத்தை மிக அதிகமாக உயர்த்தி விடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. வழக்கமான கட்டணத்தை விட இரு மடங்கு, மும்மடங்கு கட்டணம் வசூலிப்பது வீக்கெண்ட் நாட்களில் வாடிக்கையாக இருந்து வருகிறது.
சிறப்பு ஏற்பாடு: இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் புதிய ஏற்பாட்டை செய்துள்ளது. இந்த வார இறுதி நாட்களில் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கூடுதலாக 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இவை வழக்கமான வழித்தடங்களில் கூடுதல் சிறப்பு பேருந்துகளாக இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு 300 பேருந்துகள் இயக்கப்படும். மேலும், மதுரை, கோவை, சேலம், திருச்சி, பெங்களூர் ஆகிய நகரங்களில் இருந்து சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு 300 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர வேண்டும்: வார இறுதிகளில் கூடுதல் பேருந்துகளை இயக்கும் இந்த ஏற்பாட்டை இந்த வாரம் மட்டுமின்றி, எல்லா வார இறுதி நாட்களிலும் செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். வார இறுதி நாட்களில் விடப்படும் அரசு கூடுதல் பேருந்துகளுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வார இறுதி நாட்களில் கூடுதல் பேருந்துகளை இயக்குவதன் மூலம், தனியார் ஆம்னி பஸ் நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை தடுக்கலாம். வழக்கமான வார நாட்களில் சென்னை - மதுரை பேருந்து கட்டணம் ரூ.600 என்றால், வார இறுதிகளில் சராசரியாக ரூ.1000ஐ எட்டி விடுகிறது. அரசின் வீக்கெண்ட் சிறப்பு ஏற்பாட்டால் இந்தச் சிக்கல் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications