கிளாம்பாக்கம் போகச் சொல்லும் போலீசார்.. ஆம்னி பஸ் vs அரசு மோதலால் கோயம்பேட்டில் பயணிகள் கடும் அவதி!
சென்னை: ஆம்னி பஸ் vs அரசு இடையேயான மோதல் போக்கால் பதற்றமான சூழல் நிலவுவதால் சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்னையிலிருந்து கிளாம்பாக்கத்திற்கு செல்ல இலவசமாக மாகநகர பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டு, அண்மையில் முதல்வர் ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது. இந்தப் பேருந்து நிலையத்துக்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு கடந்த சில நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டது.

ஆனால், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அவகாசம் கோரப்பட்டது. அதைத் தொடர்ந்து, 24ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று முதல், தென்மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய ஆம்னிப் பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயங்க வேண்டும் என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டிருந்தது.
ஆனால், தென் மாவட்டங்களுக்கான ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட மாட்டாது என்று ஆம்னி பஸ் உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்தனர். பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க இயலாது, கோயம்பேட்டில் இருந்துதான் இயக்குவோம் எனத் தெரிவித்தனர்.
இதையடுத்து, இன்று முதல் ஆம்னி பேருந்துகள் மாநகர பகுதிக்குள் இயங்க தடை விதிக்கப்பட்டது. எனினும், தென் மாவட்டங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு வந்தன. பயணிகளின் வசதிக்காக கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்றும் தைப்பூசம் குடியரசு தின விடுமுறை தினங்கள் வருவதால் வழக்கம் போல் இயங்க அனுமதிக்க வேண்டும் என்றும் ஆம்னி பேருந்துகள் ஊர்மையாளர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.
எனினும், தமிழக அரசு, ஆம்னி பஸ்களை கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்க வேண்டும் என கறாராக தெரிவித்துள்ளது. அரசு ஆம்னி பஸ் உரிமையாளர்களின் விருப்பம்போல் செயல்பட முடியாது, மக்களுடைய விருப்பத்துக்கு ஏற்றார்போல்தான் தான் அரசு செயல்படும் என அமைச்சர் தெரிவித்தார். இந்நிலையில் தான், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குள், ஆம்னி பஸ்கள் வராதவாறு போலீசார் பேரிகேடுகளை வைத்து தடுத்தனர்.
தைபூசம், குடியரசு தின விடுமுறை, சனி மற்றும் ஞாயிறு என தொடர் விடுமுறை காரணமாக தென் மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல ஆம்னி பஸ்களில் முன்பதிவு செய்திருந்தனர். ஆம்னி பஸ் - அரசு இடையே நிலவி வரும் மோதல் போக்கு காரணமாக பயணிகள் கடும் துன்பங்களைச் சந்தித்து வருகின்றனர். ஆம்னி பஸ் ஏற வந்த பயணிகளை தடுத்த போலீஸார், கிளாம்பாக்கம் செல்லுமாறு கூறினர்.
சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகரப் பேருந்துகள் மூலமாக கிளாம்பாக்கத்துக்கு பயணிகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து ஆம்னி பேருந்துகளில் செல்ல பயணிகளுக்கு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். பயணிகளுக்கு உதவுவதற்காக கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் தகவல் உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் இருந்து கிளாம்பாக்கத்துக்கு இலவச மாநகர பேருந்து சேவை இன்று இரவு இயக்கப்பட்டு வருகிறது. ஆம்னி பஸ்களில் செல்ல கோயம்பேடு வந்த பயணிகள், மாநகர பேருந்துகள் மூலமாக கிளாம்பாக்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆம்னி பஸ்கள் - அரசு இடையேயான முரண்பட்ட போக்கால் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications