டார்கெட் 2022.. அனைத்திலும் பாமக வெற்றி! புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுவில் அன்புமணி ராமதாஸ் உறுதி!
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்,''2022-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2023-ஆம் ஆண்டை வரவேற்போம்'' என்ற தலைப்பில் இன்று நடைபெற்ற நிலையில், அதில் 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்தவரை 2024-ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் 2021-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்திலேயே தொடங்கி விட்டன.
அந்தக் கூட்டத்தில் கட்சியின் அமைப்பில் பல மாற்றங்களை செய்யத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி பாட்டாளி மக்கள் கட்சிக்கு 110 புதிய மாவட்ட செயலாளர்கள் தேர்வு செய்யப்பட்டு கட்சியின் அடிப்படைக் கட்டமைப்புகள் வலுப்படுத்தப்பட்டன.

சிறப்பு பொதுக்குழு
2022-ஆம் ஆண்டு மே மாதம் 28-ஆம் தேதி நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவராக அன்புமணி இராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது முதல் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களையும், பாட்டாளி மக்கள் கட்சியினரையும் சந்தித்து வருகிறார். மக்களின் பிரச்சினைகளுக்காக, தமிழகத்தின் எந்தக் கட்சியையும் விட பாட்டாளி மக்கள் கட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பா.ம.க.வால் தமிழகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

மக்களவை தேர்தல்
2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்வதற்காக தமிழ்நாடு மற்றும் புதுவை மாநிலங்களில் உள்ள 40 தொகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்களையும், கிளை நிர்வாகிகளையும் நியமிக்கும் பணிகளை பாட்டாளி மக்கள் கட்சி தீவிரப்படுத்தியிருக்கிறது. இதற்காக ஒரு மக்களவைத் தொகுதியின் அனைத்து வாக்குச்சாவடிகளுக்குட்பட்ட பகுதிகளிலும், மேலிடப் பார்வையாளர்களின் மேற்பார்வையில் ஒரே நேரத்தில், வாக்குச்சாவடி முகவர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த இரு வாரங்களில் மட்டும் 3 மக்களவைத் தொகுதிகளில் இந்தப் பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டிருக்கின்றன.

அன்புமணி ராமதாஸ்
இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்,''2022-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்; 2023-ஆம் ஆண்டை வரவேற்போம்'' என்ற தலைப்பில் இன்று நடைபெற்றது. புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில், சுங்கச்சாவடி அருகில் உள்ள சங்கமித்ரா திருமண அரங்கத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே. மணி, பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பாமகவின் எதிர்ப்புக்குரல்கள்
கூட்டத்தில் அடுத்த இரு மாதங்களில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுவை என மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்கும் பணிகளை நிறைவும், அதைத் தொடர்ந்து அனைத்து வாக்குச்சாவடி முகவர்களுக்கும், கிளை அளவிலான நிர்வாகிகளுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன எனவும், பாமகவின் எதிர்ப்புக்குரல்கள் அரசின் முடிவுகளை மாற்றியிருக்கின்றன, கட்சியால் விளைந்த பயன்களை அடித்தட்டு மக்கள்வரை கொண்டு சென்று சேர்க்க சமூக ஊடகங்களின் மூலமான பரப்புரையும் மேற்கொள்ளப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

அனைத்திலும் வெற்றி
மேலும் 2024 மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் இடங்கள் அனைத்திலும் வெற்றி பெறுவது தான் இலக்கு எனவும், அந்த இலக்கை அடைவதற்காக கட்சியின் நிறுவனர் ராமதாஸ், தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இடும் அனைத்து கட்டளைகளையும் நிறைவேற்றுவோம்; களப்பணிகளை முழுவீச்சில் மேற்கொள்வோம் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு உறுதியேற்றுக் கொள்கிறது என முடிவெடுக்கபப்ட்டது.

20 தீர்மானங்கள்
மேலும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து மத்தியிலும், மாநிலத்திலும் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும், தமிழ்நாட்டு மக்களின் வாழ்வை சீரழிக்கும் ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு இனியும் தாமதிக்காமல் ஆளுனர் ஒப்புதல் அளிக்க வேண்டும் எனபன உள்ளிட்ட 20 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications