பசுமை பந்தல் ஐடியா சூப்பர்! மகிழ்ச்சி மழையில் சென்னை! கழிப்பறை அமைக்க வலுக்கும் கோரிக்கை?
சென்னை: பசுமை பந்தல்கள் அமைத்ததைப் போலவே சிக்னல் உள்ள இடங்களின் அருகே கழிப்பிட வசதி செய்து தர வேண்டும் என்று சென்னை பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை மாநகரத்தில் பத்து இடங்களில் சென்னை மாநகராட்சி பசுமை பந்தல் அமைத்துள்ளது.

குறிப்பாகச் சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை அருகே ராஜா முத்தையா சாலையில் இந்தப் பந்தல் அமைக்கப்பட்டு பயணிகளின் பயன்பாட்டுக்காகத் திறந்துவிடப்பட்டுள்ளது.
சென்னையின் மைய பகுதியான அண்ணாநகர், அடையாறு, வேப்பேரி, ராயப்பேட்டை உள்ளிட்ட 10 பகுதிகளில் 6 மீட்டர் நீளம் மற்றும் 5.5 மீட்டர் உயரத்தில் பசுமை பந்தல்களை அமைப்பதற்காக பணிகளை மாநகராட்சி மிகச் சிறப்பாக ஈடுபட்டு வருகிறது.
அதே மாதிரி ஈ.வெ.ரா. பெரியார் சாலை சந்திப்பு, திருமங்கலம் ரவுண்டானா சந்திப்பு, கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலை, 3-வது அவென்யூ சந்திப்புகளில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம் சேத்துப்பட்டு சந்திப்பு, அடையாறு எஸ்.பி.சாலை-மேற்கு அவென்யூ சாலை சந்திப்பு, திருவான்மியூர் பழைய மாமல்லபுரம் சாலை உள்ளிட்ட 10 இடங்களில் பசுமை பந்தல்களுக்கான வேலைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. வெயில் என்பதைத் தாண்டி வெப்ப அலையில் மக்கள் சிக்கத் தவித்து வருகின்றனர். அப்படியான ஒரு தருணத்தில் சென்னை மாநகராட்சி எடுத்துள்ள இந்த முடிவைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.
பகல் நேரங்களில் கொளுத்தும் வெயிலில் சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளின் வசதிக்காகக் கோவை, புதுச்சேரி உள்ளிட்ட ஊர்களில் முன்பே இதைப்போன்ற பசுமை பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதை மாதிரியாகக் கொண்டு இப்போது சென்னையிலும் இதே திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளது.
இந்தப் பசுமை பந்தல் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், "முதல் கட்டமாகச் சென்னையில் 10 இடங்களில் அமைத்துள்ளோம். இதில் ஐஆர்சி வழிகாட்டுதல் படி வழிமுறைகளைக் கடைப்பிடித்துள்ளோம். பெரிய வாகனங்கள் வரும்போது இந்தப் பசுமைப் பந்தல்களைக் கிழித்துவிட வாய்ப்பு உள்ளது . ஆகவே அதற்கு ஏற்ற மாதிரி உயரமாக அமைத்துள்ளோம்.

இதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு எப்படி உள்ளது என்பதைப் பொறுத்து, அதிகப்படுத்த உள்ளோம். தேவை எனில் மழைக்காலத்திற்கும் ஏற்ற மாதிரியான பந்தல்களைப் போட முடிவு செய்துள்ளோம். இந்தப் பந்தல்கள் அருகிலேயே குடிநீர் பந்தலும் அமைக்கப்பட்டுள்ளது. வெயில் காலத்தில் பலருக்கும் இந்தக் குடிநீர் பயனளிக்கும் என்று நம்புகிறோம்.
சாதாரண சவுக்கு கட்டையை வைத்து இந்தப் பந்தல்களை அமைக்க முடியாது. காற்றில் முறிந்து விழுந்துவிட்டால், பெரிய விபத்துகள் ஏற்படலாம். ஆகவே, படிப்படியாகத் தான் இதன் தேவையை அதிகரிக்க முடியும்.
இரும்பு குழாய்களை நட்டு, நல்ல பலமாகத் தாங்கும்படி அமைக்க வேண்டும். ஆகவே உடனடியாக அவசர கதியில் அதிக இடங்களில் அமைக்க முடியாது. ஆனால், மக்கள் இதனை வரவேற்றுள்ளனர்" என்கிறார்

இவர் சொல்வதைப் போலவே சென்னைவாசிகள் பலரும் இதனை வரவேற்றுள்ளனர். இந்தப் பந்தல் நிழலில் நிற்கும் போதே ஒரு புதுவிதமான அனுபவம் கிடைக்கின்றது.
குளுகுளு என்று அதன் தாக்க உள்ளதை உணர முடிகிறது. சென்னையில் தினம் 50 கிமீட்டர் வரை பயணம் செய்வதாகவும் அதனால் வெப்பத்தைத் தாங்கிக் கொள்வது கஷ்டமாக இருப்பதாகவும் இந்தப் பந்தல் அந்தக் கஷ்டத்தைப் போக்கி உள்ளது என்று ஒருவர் கூறியுள்ளார்.

மற்றொருவர் இப்படி ஒரு ஐடியா வந்ததே பெரிய விசயம். அரசாங்கத்திற்கு மிக்க நன்றி என்று சொல்லி இருக்கிறார்.
"வெயில் காலத்தில் சிக்னலில் நிற்கும்போது உடல் முழுக்க எரியும். அந்தளவுக்குச் சூடு தாங்க முடியாது. பல இடங்களில் அலைந்து திரிந்துவிட்டு, சிக்னலில் நிற்பதே பெரிய கொடுமை.

அப்படி இருக்கும்போது இந்தப் பந்தல் போட்டுள்ளது உண்மையாகவே நல்ல யோசனை. அதுவும் பச்சை நிறத்தில் பந்தல் போட்டிருப்பதால் குளுகுளு என்று உள்ளனது. கட்டாயம் இது தேவையான ஒன்றுதான். நான் வரவேற்கிறேன்" என்கிறார் வண்ணாரப்பேட்டையில் இருந்து ரிப்பன் பில்டிங் பக்கமாக தினம் பயணிக்கும் இளைஞர் ஒருவர்.
"இதைப் போட்டுள்ளது நல்ல விசயம். இதைப்போலப் பல இடங்களில் பொதுக் கழிப்பறை வசதிகள் இல்லாமல் உள்ளது. அவசரத்திற்குச் செல்வதற்கு ஒரு இடம் இல்லை. நாங்கள் பகல் முழுக்க பல இடங்களுக்கு ஆட்டோவில் செல்கிறோம்.அப்படியான நிலையில் வீட்டுக்குப் போய் இயற்கை உபாதைகளை நிறைவேற்றிக் கொள்வது முடியாத காரியம்.
ஆகவே ஒவ்வொரு சிக்னல் அருகேயும் கழிப்பறை வசதி செய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்" என்கிறார் ஒரு ஆட்டோ ஓட்டுநர். அவரின் சவாரியாகச் சென்ற முதியவரும் இந்தக் கருத்தை வரவேற்கிறார்.












Click it and Unblock the Notifications