பாட்னா கூட்டம் நம்பிக்கை தருது.. பாஜக நிச்சயம் தோற்கடிக்கப்படும்.. சென்னை திரும்பிய ஸ்டாலின் பேட்டி!
சென்னை: எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், "பாட்னா கூட்டம் நம்பிக்கை தருகிறது, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக நிச்சயம் தோற்கடிக்கப்படும்" எனக் கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமரவிடக்கூடாது என எதிர்க்கட்சி தலைவர்கள் திட்டமிட்டு ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்களின் மாபெரும் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, திமுக சார்பில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜிரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திவாங்கர், சிவசேனா சார்பில் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட தலைவர்கள் என 16 எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட 6 மாநில முதல்வர்கள் கலந்து கொண்டனர்.
சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் பங்கேற்ற தலைவர்கள் பாஜக அரசை வீழ்த்த வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தனர். இந்த ஆலோசனை கூட்டம் நிறைவுபெற்றதை அடுத்து, தமிழக முதல் அமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பாட்னாவில் இருந்து சென்னைக்கு திரும்பினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின், "எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் 7 முக்கிய கருத்துக்களை எடுத்து வைத்தேன். மதச்சார்பற்ற கட்சிகளின் ஒற்றுமைதான் தமிழ்நாட்டில் வெற்றி பெற உதவியது. இதேபோல தேசிய அளவில் ஒற்றுமை அமைய வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பேசினேன்.
எந்த மாநிலத்தில் எந்த கட்சி பலமாக உள்ளதோ, அங்கு அந்தக் கட்சியின் தலைமையில் கூட்டணி அமைய வேண்டும் என்று கூறினேன். ஒடுக்கப்பட்ட, ஏழை எளிய மக்கள் காக்கப்பட வேண்டும் என்றால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும் எனப் பேசினேன்.
பாஜக என்று சொல்வதால் ஏதோ ஒரு தனிப்பட்ட கட்சிக்கு எதிரான கூட்டமாக இன்று நடந்தது என்று நினைக்க வேண்டாம். நாட்டின் பன்முகத்தன்மையைக் காக்க வேண்டுமென்றால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது. தேர்தலுக்கு பிறகு கூட்டணி என்பது இருக்கக்கூடாது, குறைந்தபட்ச செயல் திட்டங்களை உருவாக்க குழு அமைக்க வேண்டும் என்று பேசினேன்.
பாட்னாவில் நடைபெற்ற மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டம் நம்பிக்கையை தருகிறது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக நிச்சயம் தோற்கடிக்கப்படும். பாஜகவை வீழ்த்துவதை அனைத்து எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் ஒற்றை இலக்காக கொண்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications