ஆவடியை அதிர வைத்த இரட்டைக் கொலை.. ஆய்வாளர் சஸ்பெண்ட்! போலீஸ் கமிஷனர் அதிரடி ஆக்ஷன்!
சென்னை: பட்டாபிராம் இரட்டைக் கொலை சம்பவம் எதிரொலியாக ஆய்வாளர் ஜெகநாதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆவடி காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று நடந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக பட்டாபிராம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர்
ஜெகநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே பட்டாபிராம் அடுத்துள்ள ஆயில்சேரி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ரெட்டைமலை சீனிவாசன். பிரபல ரவுடியும், சரித்திர பதிவேடு குற்றவாளியுமான இவரும், இவரது சகோதரர் ஸ்டாலின் ஆகிய இருவரும் நேற்று ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். பட்டாபிராம் பகுதியில் அண்ணன், தம்பி ஆகிய இருவரும் ஓட ஓட சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொலைச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ரெட்டைமலை சீனிவாசனிடம் தருண், சாலமன், இளங்கோ, ஜோகன், மாதேஷ் அடங்கிய கும்பல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பின்னர் இருவரையும் கொலை செய்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
முன்பகை காரணமாக கும்பலுடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அப்போது வாக்குவாதம் முற்றியதில் அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாள் போன்ற ஆயுதத்தால் இருவரையும் தாக்க முயன்றதாகவும், அதனைக் கண்டு பட்டாபிராம் நோக்கி ஸ்டாலினும், ஆவடி நோக்கி ரெட்டைமலை சீனிவாசனும் அலறியடித்து ஓடியதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், விடாமல் அந்த கும்பல் இரு குழுக்களாகப் பிரிந்து இருவரையும் துரத்தியுள்ளனர். அப்போது, பட்டாபிராமில் ஸ்டாலினையும், ஆவடியில் ரெட்டைமலை சீனிவாசனையும் வெட்டி படுகொலை செய்ததாக தெரியவந்துள்ளது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரட்டைக் கொலை குறித்து காவல்துறையினர் கொலையாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும், இந்த இரட்டைக் கொலை சம்பவத்தால் அப்பகுதியில் நிலவும் பதற்றத்தைக் குறைக்கவும், அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கவும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவத்தின் எதிரொலியாக பட்டாபிராம் சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளர் ஜெகநாதன் பணியிடை நீக்கம் செய்து ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சஸ்பெண்ட் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஜெகநாதன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். பணியில் கவனக்குறைவாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை பாயும் என்று போலீசாருக்கு ஆவடி காவல் ஆணையர் சங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications