அடித்து ஆடும் பவன் கல்யாண்.. உதயநிதி மீது விமர்சனம்.. அதிமுகவுக்கு பாராட்டு
சென்னை: ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திமுக இடையே விவாதம் ஏற்பட்டுள்ளது. சனாதன தர்மம் குறித்து தொடங்கிய இந்த விவாதம் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பவன் கல்யாண் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி குறித்து பாராட்டியிருப்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகரும், ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வருமாக இருப்பவர் பவன் கல்யாண். திருப்பதி லட்டு தொடர்பாக சமீபத்தில் எழுந்த சர்ச்சைக்காக பவன் கல்யாண் விரதம் இருந்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து சனாதன தர்மத்துக்கு எதிராக பேசக் கூடாது என்றும் கூறி வருகிறார்.

சமீபத்தில் பவன் கல்யாண், செய்தி தொலைக்காட்சிக்கு அளித்திருந்த பேட்டி சமூகவலைதளங்களில் வைரலானது. அதில் அவர் தமிழ்நாட்டுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு குறித்து பேசியிருந்தார். தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த கலைஞர்கள் பெயரை சொல்லி பாராட்டியிருந்தார்.
திருப்பதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பவன் கல்யாண், சனாதன தர்மத்தை அழிக்க போவதாக சிலர் சொல்கிறார்கள். உண்மையில், சனாதனத்தை யார் அழிக்க நினைக்கிறார்களோ, அவர்கள்தான் அழிந்து போவார்கள் என்று உதயநிதி ஸ்டாலின் மீது விமர்சனம் செய்திருந்தார்.
இதையடுத்து தமிழ்நாடு துணை முதல்வர் VS ஆந்திரா துணை முதல்வர் என்று சமூகவலைதளங்களில் விவாதம் நடத்தி வருகின்றனர். பவன் கல்யாண் மீது திமுகவினரும், திமுக மற்றும் உதயநிதி மீது பவன் கல்யாண் ஆதரவாளர்களும் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றனர்.
பவன் கல்யாண் மீது திமுகவினர் மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருந்தனர். இந்நிலையில் அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் குறித்து பவன் கல்யாண் தன் எக்ஸ் தளத்தில் பாராட்டி பதிவு போட்டிருந்தார்.
அந்தப் பதிவில், நான் சென்னையில் இருந்தபோது எம்ஜிஆர் குறித்து நிறைய கேள்விப்பட்டுள்ளேன். அவர் மீது நான் மிகுந்த அன்பும், மரியாதையும் வைத்துள்ளேன். அக்டோபர் 17 ஆம் தேதி அதிமுக 53ம் ஆண்டு விழாவை சந்திக்க உள்ளது. அதற்காக அந்தக் கட்சியின் தொண்டர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய தமிழ் ஆசிரியர்தான் எம்ஜிஆர் குறித்து முதலில் என்னிடம் அறிமுகம் செய்தார். அவர் இரண்டு திருக்குறள் சொல்லி, அதற்கு எம்ஜிஆர் மிகவும் பொருத்தமானவர் என்று கூறினார். "கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி" என்ற திருக்குறளை குறிப்பிட்டு நேர்மை, மக்கள் மீதான அக்கறை உள்ளிட்ட தகுதிகளை கொண்டவர் என கூறியிருந்தார்.
இதற்கு முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தன் எக்ஸ் பக்கத்தில் பவன் கல்யாணுக்கு நன்றி தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், சமத்துவம் - சமூகநீதி தழைக்க எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த அதிமுக தொடக்க விழாவை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த ஆந்திர துணை முதல்வருக்கு நன்றி என்று கூறியுள்ளார்.
இந்தப் பதிவுக்கு தன் எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ள கவன் கல்யாண், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி, தலைமுறை கடந்தும் கோடிக்கணக்கான மக்களின் மனதில் இருந்து எப்போதும் நீங்காமல் இருக்கும். உங்களது தலைமையில் (எடப்பாடி) இந்த சாதனைகள் தொடரட்டும். என்று கூறியுள்ளார். இதையடுத்து அதிமுகவினர் பலரும் பவன் கல்யாணுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications