அடகு வைத்த நகை மூழ்கிவிடுமா? இந்த ஒரு விஷயத்தை கவனிக்கலனா தங்கம் கைவிட்டு போகும்.. உஷார்
சென்னை: சென்னையில் வசிக்கும் நடுத்தர வர்க்க மக்கள் மற்றும் சிறு குறு தொழிலதிபர்களுக்கு அவசர காலங்களில் ஆபத்பாந்தவனாக விளங்குவது தங்க நகைக்கடன் ஆகும்.. மருத்துவச் செலவு, கல்வி கட்டணம் அல்லது தொழில் முதலீடு என எந்தத் தேவையாக இருந்தாலும் கையில் இருக்கும் தங்கத்தை அடமானம் வைத்து உடனடியாகப் பணம் பெறுவது இன்று வாடிக்கையாகிவிட்டது.. ஆனால் இதில் இருக்கும் நன்மைகளைத் தாண்டி பலருக்கும் தெரியாத சில கசப்பான உண்மைகளும் ஆபத்துகளும் ஒளிந்துள்ளன.. இது குறித்து வங்கி வட்டாரங்களில் கூறப்படும் முக்கிய தகவல்களை சுருக்கமாக பார்க்கலாம்..
பொதுவாக வங்கிகளில் நகைக்கடன் பெறுவது என்பது தனிநபர் கடனை விட மிகவும் எளிதானது.. இதற்கு பெரிய அளவில் வருமானச் சான்றோ அல்லது ஐடி ரிட்டர்ன்ஸ் ஆவணங்களோ சமர்ப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

நகைக்கடன் நன்மைகள்
உங்கள் கையில் இருக்கும் தங்கம் மட்டுமே கடனுக்கான மிகப்பெரிய உத்தரவாதம் என்பதால் வங்கிகள் எளிதாகப் பணத்தை வழங்கி விடுகின்றன. குறிப்பாக சென்னையில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் தனியார் நிதி நிறுவனங்களை விட வட்டி விகிதம் மிகவும் குறைவாக இருக்கிறது. நகைகளுக்கும் அதிக பாதுகாப்பு கிடைப்பதோடு வட்டிச் சுமையையும் நம்மால் குறைக்க முடிகிறது..
இருந்தாலும் நகைக்கடனில் இருக்கும் மிகப்பெரிய சவாலே அதனைத் திருப்பிச் செலுத்தும் காலக்கெடுதான்.. எளிதாகப் பணம் கிடைக்கிறது என்பதற்காகத் தேவைக்கு அதிகமாகக் கடன் வாங்குவது பின்னாளில் பெரும் சுமையாக மாறிவிடும்.
வட்டி - பொருளாதார இழப்பு
ஒருவேளை நீங்கள் வாங்கிய கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் வட்டியுடன் செலுத்தத் தவறினால் வங்கிகள் உரிய எச்சரிக்கைக்குப் பிறகு உங்கள் நகைகளைப் பொது ஏலத்தில் விட்டுவிடும்.. இது பொருளாதார இழப்பைத் தாண்டி குடும்ப கவுரவத்தையும் பாதிக்கும் ஒரு விஷயமாகும்.. சில தனியார் நிறுவனங்களில் மறைமுகக் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதால் வட்டி மலைபோல் உயர்ந்துவிடும் அபாயமும் உள்ளது..
தங்கத்தின் தற்போதைய சந்தை விலையில் சுமார் 75 சதவீதம் வரை மட்டுமே கடனாகப் பெற முடியும் என்பது ரிசர்வ் வங்கியின் விதியாகும்.. நகையில் உள்ள கற்களின் எடை கழிக்கப்பட்டுச் சுத்தமான தங்கத்தின் எடைக்கு மட்டுமே பணம் வழங்கப்படும்.. இதனால் நீங்கள் எதிர்பார்க்கும் முழுத் தொகையும் கிடைக்காமல் போகலாம்..
தங்க நகை விலை
அதேபோல் சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை திடீரென வீழ்ச்சியடைந்தால் வங்கிகள் கூடுதல் தொகையை உடனடியாகச் செலுத்தச் சொல்லி நெருக்கடி கொடுக்கவும் வாய்ப்பு உள்ளது..
நகையை அடமானம் வைக்கும் முன் கடன் தொகையைத் திருப்பிச் செலுத்தும் திட்டத்தைத் தெளிவாக வைத்திருக்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.
எனவே வட்டி விகிதம் மற்றும் அபராதக் கட்டணங்களை முன்கூட்டியே கேட்டறிந்து செயல்பட வேண்டும்.. தேவையான அடையாள சான்றுகளான ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும்.. திட்டமிடல் இல்லாமல் நகையை அடமானம் வைப்பது பின்னர் சிக்கலை உருவாக்கக்கூடும் என்பதால் அவசரத் தேவைக்கு மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும் என்று எச்சரிக்கப்படுகிறது.
அவசரத்துக்கு உதவும் சேமிப்பு
அதனால், நகை என்பது ஒரு குடும்பத்துக்கு அவசர நேரத்தில் உதவும் சேமிப்பு.. அதை அடமானம் வைக்கும் போது தேவைக்காக மட்டும் செய்யாமல், அதை மீண்டும் எடுக்க முடியுமா என்று முன்கூட்டியே கணக்குப் போடணும்.. திட்டமிடல் இல்லாமல் நகை வைப்பது பின்னர் சிக்கலாக மாறலாம்.. அதனால் அவசரத் தேவைக்கு மட்டும் இதைப் பயன்படுத்தினால் தான் நன்மை இருக்கும்...!!












Click it and Unblock the Notifications