சென்னை மக்களே.. சிலிண்டர் தீரப்போகிறதா.. உடனே புக்கிங் பண்ணுங்க.. புதிய சிக்கல்?
சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கேஸ் சிலிண்டர் தீரப்போகிறது என்றால் ஒரு சிலிண்டர் தீர்ந்த உடனேயே புக்கிங் செய்து விடுங்கள். ஏனெனில் புதிதாக கேஸ் சிலிண்டர் பதிவு செய்தால், 10 முதல் 20 நாட்கள் வரை தாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள். பல இடங்களில் புக்கிங் செய்த 10 நாட்களுக்கு பிறகே சிலிண்டர் கிடைப்பதாக வேதனை தெரிவிக்கிறார்கள்.
சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்பாடு என்பதற்கு ஒவ்வொரு வீட்டிற்கும் பயன்பாட்டை பொறுத்து 30 முதல் 60 நாட்களுக்குள் தீர்ந்து விடுகிறது. இரண்டு சிலிண்டர் வைத்துள்ள மக்கள் தங்களுக்கு தேவையான சிலிண்டரை ஒரு சிலிண்டர் தீர்ந்த உடனே புக்கிங் செய்துவிடுகிறார். அதேநேரம் ஒருசிலிண்டர் மட்டுமே வைத்துள்ளவர்களின் நிலைமை கொஞ்சம் சிக்கலானது தான்.

அதேநேரம் சிலிண்டர் தீர்ந்த உடன் இன்னொரு சிலிண்டரை மாட்டும் மக்கள் கொஞ்சம் கால தாமதமாக புக்கிங் செய்தால் அடுத்த சிலிண்டர் வர மிகவும் தாமதம் ஆவதால் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
தமிழ்நாட்டில், வீடுகள் மற்றும் வர்த்தக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களை இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விநியோகம் செய்து வருகின்றன . சிலிண்டர் தீர்ந்து போனால், 24 மணிநேரமும் மொபைல் மூலம் புக்கிங் செய்யலலாம்.
முன்பெல்லாம் பதிவு செய்த ஓரிரு நாட்களுக்குள் புதிய சிலிண்டர் விநியோகம் செய்யப்படும். ஆனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக சிலிண்டர் விநியோகம் தாமதம் ஆவதாக மக்கள்வேதனை தெரிவிக்கிறார்கள்.
மழை காலத்தில் மட்டும் தான் சிலிண்டர் வருவதற்கு சற்றுதாமதம் ஆகும். ஏனெனில் மழை காலங்களில் சென்னையில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி இருக்கும். சிலிண்டர் கொண்டு செல்வதில் சிரமம் இருக்கும். ஆனால் மற்ற நாட்களில் எவ்வித பிரச்சினையும் இன்றி சிலிண்டர் விநியோகம் நடந்து வந்தது.

இந்நிலையில், சிலிண்டர் விநியோகத்தில் திடீரென தாமதம் ஏற்படுகிறது. பதிவு செய்தால், 10 முதல் 20 நாட்கள் கழித்தே சிலிண்டர் வருகிறது என்றும் இதுபற்றிகேட்டால், விநியோக ஏஜென்சிகளும் முறையாக பதில் அளிப்பது இல்லை என்றும் பொதுமக்கள் பலர் குற்றம்சாட்டுகிறார்கள். எனவே ஒரு சிலிண்டர் தீர்ந்தால் உடனே புக்கிங் செய்துவிடுங்கள். இல்லாவிட்டால் நீண்ட நாள் அவதிப்பட வேண்டியது வரலாம் என்று மக்கள் கூறுகிறார்கள்
இதுகுறித்து எண்ணெய் நிறுவன அதிகாரிகள் கூறும் போது, "தற்போது பயன்பாட்டில் உள்ள ஆயுட்காலம் முடிந்த மற்றும் துருப்பிடித்த சிலிண்டர்கள் மாற்றப்பட்டு வருகின்றன. ஆனால், அதற்கு தகுந்தாற் போல் புதிய சிலிண்டர்கள் வரத்து குறைவாக உள்ளது. இதுவே தாமதத்துக்கு காரணம். இப்பிரச்சினை விரைவில் சரிசெய்யப்படும்" என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications