அம்பேத்கர் எங்க..மோடி எங்க! இளையராஜாவை கண்டிக்கிறோம்.. பட் நாகரீகமா விமர்சனம் செய்யுங்கள்: தமிழச்சி
சென்னை: பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசிய இளையராஜாவை வன்மையாக கண்டிப்பதாகவும், ஆனால் அவரை நாகரீகமாக விமர்சிக்க வேண்டும் எனவம் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தரமணி மற்றும் வேளச்சேரி பகுதி வார்டுகளில் மாநகராட்சி உறுப்பினர்கள் பாஸ்கரன், மகேஸ்வரி, முருகவேல் ஆகியோருடன் திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் ஆய்வு மேற்கொண்டு மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார்.
ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த உத்தரவின்படி இந்த ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். ஓ.எம்.ஆர் பகுதியின் பிரதான பிரச்சனையாக உள்ள குடிநீர் மற்றும் கழிவுநீர் வடிகால் பிரச்சனைக்கு விரைவில் செயல்திட்டம் உருவாக்கப்படும் என அவர் உறுதியளித்தார்.

நாகரீகமாக இளையராஜாவை விமர்சிக்கலாம்
பிரதமர் மோடி குறித்த இளையராஜாவின் கருத்து குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த தமிழச்சி தங்கபாண்டியன், "இளையராஜாவின் கருத்தில் கொஞ்சமும் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. அண்ணல் அம்பேத்கர் எங்கே... பிரதமர் மோடி எங்கே... அவரது கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம். அதேநேரம் இளையராஜா இசையின் மேஸ்ட்ரோ என்று நாம் மதிக்கின்ற ஆளுமை. அவரதில் கருத்தில் நமக்கு உடன்பாடில்லை. ஆனால், அவரை வசைபாடுவதில் நாகரிகத்தை கடைப்பிடிக்க வேண்டும் என கூறினார்.

என்னதான் சொன்னார் இளையராஜா?
புளூ கிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன் நிறுவனம் "மோடியும் அம்பேத்கரும்" என்ற பெயர் கொண்ட புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறது. இந்த புத்தகத்திற்கு இளையராஜா முன்னுரை எழுதி இருந்தார். அதில், "அம்பேத்கரை தெரிந்துகொள்வதை போல அவரது கருத்தை அமல்படுத்துபவர்களை நாம் ஊக்கப்படுத்த வேண்டும். சமூக நீதியை எடுத்துக் கொண்டால், பல்வேறு சட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வந்துள்ளார்.

அம்பேத்கரே பெருமைப்படுவார்
இலவச எரிவாயு திட்டம், பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்காக பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள திட்டங்களே நினைவுக்கு வருகின்றன. குழந்தைகளை காப்போம், குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தாலும் முத்தலாக்கிற்கு எதிரான சட்டத்தின் மூலமாகவும் பெண்கள் வாழ்வில் மாற்றத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். இதனை கண்டு அம்பேத்கரே பெருமைப்படுவார்.

அம்பேத்கரும் மோடியும்
அம்பேத்கரும், மோடியும் ஏழ்மையையும் ஒடுக்குமுறையையும் அனுபவித்தவர்கள். அதை ஒழிக்க பாடுபட்டவர்கள். இருவருமே இந்தியாவின் மீது பெரிய கனவுகளை கண்டதுடன் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டனர். இப்படி இருவரும் ஒன்றுபடுவதை இந்த புத்தகம் எடுத்துக்காட்டி இருக்கிறது. பிரதமர் மோடியால் கட்டமைக்கப்பட்டு வரும் தற்சார்பு இந்தியா என்பது விடுதலை போராட்ட தியாகிகளுக்கு செலுத்தும் சரியான அஞ்சலி." என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications