சின்ராசு தூக்குவாளியை எடுத்துட்டு கறி வாங்க கிளம்பிட்டான்.. வீடு தோறும் ஒரு மாற்றம்!
Recommended Video
சென்னை: பிளாஸ்டிக்கை ஒழிக்க ஆரம்பித்து விட்டார்கள் மக்கள்.. பெரிய அளவில் இல்லாவிட்டாலும் சொல்லிக் கொள்ளும்படியாக. இன்று முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வந்துள்ள நிலையில் மக்களிடமும் மாற்றம் தென்படத் தொடங்கியுள்ளது.
மக்களிடம் வரவேற்பு இல்லை என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்பட்டாலும் கூட மாறித்தான் பார்ப்போமே என்ற எண்ணம் மக்களுக்கு வரத் தொடங்கியுள்ளது நல்ல அறிகுறிதான். அந்த வகையில் இன்று முதல் பிளாஸ்டிக் பைகள், கேரி பேக்குகள் வியாபாரத் தலங்களில் அடியோடு குறைந்துள்ளன.
துணிப் பைகளுக்கும், பிற பாத்திரங்களுக்கும் மக்கள் மாற ஆரம்பித்துள்ளனர். கடைகளில் பிளாஸ்டிக் கேரி பேக்குகளை இன்று முதல் தருவதில்லை. மாறாக சன்னமான துணிப் பைகளில்தான் பொருட்கள் தரப்படுகின்றன.
இறைச்சிக் கடைகளில் மாற்றம்
சாதாரண பொருட்களை வாங்க துணிப் பைகள் சரிப்பட்டு வரும். அதேசமயம், இறைச்சிக் கடைகளில் அதில் ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. காரணம், இறைச்சியை துணிப் பையில் போட்டு வாங்கிச் செல்லும்போது அதிலிருந்து ரத்தம் சொட்டி ஏதோ தலையை வெட்டி எடுத்துச் செல்வது போன்ற பிரமை ஏற்படுகிறது.
எவர்சில்வர் பாத்திரம்
அந்தக் காலத்தில் தூக்கு வாளி எனப்படும் எவர்சில்வர் பாத்திரம், அலுமினியப் பாத்திரங்களில்தான் கறிக்கடைக்குச் செல்வது வழக்கம். அதிலும் மீன் என்றால் பேப்பரிலேயே வெட்டி எடுத்து கொண்டு வந்து விடலாம். இந்த பழைய முறைக்கு தற்போது மக்கள் மாற ஆரம்பித்துள்ளனர்.
துணிப் பையும் இருக்கு பாஸ்
அதேசமயம், கறிக் கடைகளில் துணிப் பைகளையும் வைத்துள்ளனர். ஆனால் அதற்கு தனியாக பைசா தர வேண்டும். எனவே பாத்திரமாக எடுத்துச் செல்வது பெஸ்ட் என்பது கறிக் கடைக்காரர்களின் அறிவுரையாகும். மக்களும் இப்போது பாத்திரத்துடன் கறி வாங்கிச் செல்ல ஆரம்பித்துள்ளனர். இது நிச்சயம் நல்ல மாற்றம்தான்.
ஆரோக்கியம் காப்போமே
பிளாஸ்டிக் உண்மையிலேயே உடல் ஆரோக்கியத்திற்குப் பெரும் கேடு. இன்று பாத்ரூம் டப் முதல் அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களிலும் பிளாஸ்டிக் ஊடுறுவி விட்டது. அதை மொத்தமாக அகற்றுவது என்பது அத்தனை எளிதான காரியம் இல்லைதான். இருப்பினும் சின்ன சின்னதாக மாற ஆரம்பித்தால் நிச்சயம் பிளாஸ்டிக் இல்லாத உலகை படைக்க முடியும். பழையது எப்போதுமே சுவாரஸ்யமானது, சுகமானது.. பழைய காலத்திற்கு மாறித்தான் பார்ப்போமே.. நமது நல்லதுக்காக.. பூமியின் ஆரோக்கியத்திற்காக.