புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் மக்கள்! 5 மாதங்களாக ஸ்தம்பித்த பணி! என்ன காரணம்?
சென்னை: தமிழகம் முழுவதும் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்து 5 மாதங்களுக்கு மேலாகியும், பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
இந்தியாவில் பொதுவினியோகத் திட்டத்தை வருமான வரம்பு இல்லாமல் அனைவருக்கும் செயல்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டப் பணிகளில் அதிகாரிகளும், கள ஆய்வு அலுவலர்களும் பிசியாக இருப்பதால் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி முற்றிலும் முடங்கிவிட்டது. ஆதார் அட்டைக்கு அடுத்தப்படியாக குடும்ப அட்டை தான் முக்கிய அடையாள ஆதாரமாக திகழ்வதால் புதிதாக திருமணம் ஆனவர்கள் உட்பட பலரும் குடும்ப அட்டைக்கு ஆன்லைன் மூலம் விண்ணபித்து காத்திருக்கின்றனர்.
அதேபோல் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல், புதிதாக விண்ணப்பித்தல் போன்ற பணிகள் நடைபெறா வண்ணம் உணவு வழங்கல் துறை இணையதளம் செயலிழந்து காணப்படுகிறது. மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு 3 மாதங்களாகி விட்டதால் இனி மேலாவது வழக்கமான பணிகளை கவனிக்க உணவு வழங்கல் துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பது பரவலான கோரிக்கையாக உள்ளது.
மகளிர் உரிமைத் திட்டத்தில் பயனடைய தகுதிவாய்ந்த பெண்களை தேர்வு செய்யும் பணிகளில் உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் முதல் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இப்போது ஓரளவு இந்த திட்டப்பணிகள் நிறைவடைந்துவிட்டதால் இனி வரும் நாட்களிலாவது புதிய ரேஷன் கார்டுகள் வாங்கும் பணியை அரசு தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதனிடையே தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக மகளிர் உரிமைத் திட்டத்தில் மாதம் ரூ.1000 பெற 1.63 கோடி விண்ணப்பங்கள் வந்த நிலையில், அவற்றில் 1.06 கோடி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்பட்டன. மீதமுள்ள 57 லட்சம் விண்ணப்பங்களை தமிழக அரசு தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கப்படாத விண்ணப்பத்தாரர்கள் 57 லட்சம் பேரும் கோட்டாட்சியர்களிடம் மேல்முறையீடு செய்யலாம் என்று அறிவித்திருந்தாலும் இன்னும் குளறுபடி நிகழ்வது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications