வெளியூர் ரேஷன் கார்டு வைத்து சென்னை, கோவையில் பொருள் வாங்குறீங்களா.. உடனே இதை பண்ணுங்க
சென்னை: வெளியூர் ரேஷன் கார்டு வைத்து சென்னை, கோவையில் பொருள் வாங்குறீங்க அப்படீன்னா, நீங்கள் அறிய வேண்டிய விஷயங்களை பார்ப்போம்.
சென்னையில் ஏராளமானோர் வெளியூர் ரேஷன் கார்டு வைத்துள்ளார்கள். பலர் சொந்த ஊரின் பெயரிலேயே ரேஷன் கார்டு வைத்துக்கொண்டு சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குகிறார்கள். செனனையை போலவே கோவை, திருப்பூரிலும் கணிசமானோர் சொந்த ஊரில் இருந்து பிழைக்க வந்து, ஊரை மாற்றாமலேயே பொருட்களை வாங்குகிறார்கள்.

உண்மையில் சொந்த ஊரில் இருந்து சென்னை, கோவை,திருப்பூர் போன்ற நகரங்களுக்கு குடிபெயர்ந்தவர்கள், ரேஷன் கார்டை நீங்கள் குடியிருக்கும் பகுதியின் முகவரிக்கே மாற்றிக்கொள்வது நல்லது. ஏனெனில் அரசு அறிவிக்கும் எந்த திட்டங்களும் ரேஷன் கார்டை அடிப்படையாக வைத்துதான் வழங்கப்படுகிறது.. பொங்கல் பரிசு, நிவாரண தொகை, மகளிர் உரிமை தொகை போன்றவற்றை வாங்குவதற்கு கண்டிப்பாக வசிக்கும் பகுதியிலேயே ரேஷன் கார்டு இருப்பது சிறப்பாக இருக்கும்.
அதேபோல் குழந்தைகளுக்கு ஆதார் கார்டு வாங்க, வங்கியில் நகைக்கடன் வாங்க, எல்லாவற்றுக்குமே உங்களுக்கு உள்ளூர் முகவரியுடன் குடும்ப அட்டை இருப்பது நல்லது. அதேபோல் ரேஷன் கடைகளில் வெளியூர் கார்டு என்றால் மாதக்கடைசியில் தான் பொருட்கள் தருவார்கள். அதே உள்ளூர் கார்டு என்றால் மாதம் பிறந்த ஒன்றாம் தேதியே உரிமையோடு கேட்க முடியும். ஒரே நாடு ஒரு ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ் பொருட்களை எங்கு வேண்டுமானாலும் வாங்கி கொள்ள முடியும் என்றாலும், பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள் உள்ளூர் கார்டுகளுக்கே முக்கியதுவம் கொடுத்து தரப்படுகின்றன.
சென்னையில் வெளியூர் ரேஷன் கார்டு வைத்து பொருட்கள் வாங்குவோருக்கு துவரம் பருப்பு, பாமாயில் போன்றவை சில மாதங்களாகவே கிடைக்கவில்லை.. மற்ற பொருட்கள் எளிதாக கிடைக்கின்றன.இதுபற்றி கடையில் உள்ளவர்களிடம் கேட்டால், மாத கடைசியில் வாருங்கள் என்று கூறுகிறார்கள். வெளியூர் ரேஷன் கார்டை பொறுத்தவரை ஒரு ரேஷன் கடையில் ஒரு மாதத்தில் ஒருமுறை தான் பதிய முடியும் என்கிறார்கள்.
இரண்டாவது முறை வேறு ரேஷன் கடையில் பொருட்களை வாங்குமாறு கடை ஊழியர்கள் அறிவுறுத்துகிறார்கள். எனவே பொருட்கள் வாங்கும் போதே மொத்தமாக வாங்கி கொள்வது நல்லது. அதேபோல் முடிந்தவரை சொந்த ஊரில் இருந்து வந்தவர்கள் குடியிருக்கும் ஏரியாவிற்கே ரேஷன் கார்டை மாற்றிக்கொள்ளுங்கள்.
கடந்த முறை பொங்கல் சமயத்தில் பொங்கல் பரிசு பலராலும் வாங்க முடியாமல் போனதற்கு காரணம், வெளியூரில் ரேஷன் கார்டு வைத்திருந்தது தான் காரணம் ஆகும். அதேபோல் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ் போன்றவற்றை குழந்தைளுக்கு வாங்கவும், குழந்தைகளின் பெயரை ரேஷன் கார்டில் சேர்க்கவும் அலைய வேண்டிய அவசியம் இருக்காது. எனவே வெளியூர் ரேஷன் கார்டு வைத்து சென்னை, கோவையில் பொருள் வாங்குறீங்க அப்படீன்னா முடிந்தவரை இருக்கும் ஊருக்கு மாற்றிக்கொள்வதே நல்லது.












Click it and Unblock the Notifications