நானும் விவசாயிதான்.. டங்ஸ்டன் சுரங்க ஏல ரத்துக்கு மக்களின் போராட்டமே காரணம்.. எடப்பாடி பழனிசாமி!
சென்னை: மதுரை அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க ஏல ரத்துக்கு மக்களின் போராட்டமே காரணம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நானும் ஒரு விவசாயி என்பதால், விவசாயிகளின் பிரச்சனையை புரிந்து சட்டமன்றத்தில் பேசியதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, மக்களின் எழுச்சி காரணமாகவே திமுக சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அரிட்டாப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள 2,015 ஹெக்டேர் நிலத்தில் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் கொண்டு வரவுள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இதில் சுரங்கத்தை வெட்டி எடுப்பதற்காக டெண்டரை வேதாந்தாவின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் கைப்பற்றியது. இதற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்பின் மத்திய அரசு அரிட்டாப்பட்டியில் சுரங்கத் திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் தரப்பில் தங்களுக்கு ஆதரவு கூறிய அரசியல் கட்சியினருக்கு நன்றி கூறி வருகின்றனர். அந்த வகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தனர்.
அப்போது எடப்பாடி பழனிசாமி பேசுகையில், டங்ஸ்டன் திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை தொடர்ந்து மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் தரப்பில், நாங்கள் அறிவித்த டெண்டரை இறுதி செய்யும் வரை மாநில அரசுடன் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை. அதனால் இறுதி செய்கிறோம் என்று கூறியது. மக்கள் பாதிக்கடப்படக் கூடிய திட்டமாக இருந்தால், டெண்டர் அறிவித்த உடனே, 9 மாதங்களில் உங்கள் உணர்வுகளை மத்திய அரசிடம் தெரிவிக்காதது ஏன்?
அப்படி மத்திய அரசிடம் கூறியிருந்தால், இந்த போராட்டமே தேவையில்லை. யாருக்கோ உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் திமுகவினர் 9 மாதமாக காலம் தாழ்த்தினார்கள். ஆனால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், வேறு வழியின்றி சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்கள். இந்த தீர்மானத்தை 2023ஆம் ஆண்டிலேயே கொண்டு வந்திருக்கலாம் தானே?
அப்போதெல்லாம் திமுகவினர் எந்த தீர்மானத்தையும் கொண்டு வரவில்லை. இதனை விவசாயிகள் சிந்தித்து பார்க்க வேண்டும். மக்களின் போராட்டம் காரணமாக இந்த சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நானும் ஒரு விவசாயி என்பதால், விவசாயிகளின் பிரச்சனை அறிந்து அதிமுக தரப்பில் மக்களுக்கு ஆதரவாக நானும் சட்டப்பேரவையில் பேசினேன்.
அப்போது நான், என் உயிரைக் கொடுத்தாவது விவசாயிகளை காப்பாற்றுவேன் என்று தெரிவித்தார். அதன்பின்னர் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், என் பதவியே போனாலும் பரவாயில்லை என்று கூறியதாக பேசியுள்ளார். எடப்பாடி பழனிசாமியின் பேச்சு அக்கட்சியினர் இடையே பரவலாக கவனிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications