'அண்ணன்' சீமான் வீட்டில் 'தம்பி' பேரறிவாளன், அற்புதம் அம்மாள்- நெகிழும் நாம் தமிழர் நிர்வாகிகள்!
சென்னை: நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை ராஜீவ் கொலை வழக்கில் இருந்து விடுதலையான பேரறிவாளன் நேற்று சந்தித்து பேசியதை நெகிழ்ச்சியுடன் அக்கட்சி நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 31 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்தவர் பேரறிவாளன். உச்சநீதிமன்றத்தில் தம்மை முன்கூட்டியே விடுதலை செய்ய கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார் பேரறிவாளன். இவ்வழக்கு சுமார் 6 ஆண்டுகாலம் நடைபெற்றது.
இந்த வழக்கில், பேரறிவாளனை சிறையில் இருந்து விடுதலை செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. பேரறிவாளனின் விடுதலையை ஒட்டுமொத்த தமிழகமும் கொண்டாடி வருகிறது. சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இடதுசாரி தலைவர்கள் என பலரையும் பேரறிவாளன் நேரில் சந்தித்து தமது விடுதலைக்காக குரல் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்து வருகிறார் பேரறிவாளன்.
இந்த அடிப்படையில் சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் பேரறிவாளன் நேற்று சந்தித்தார். அதற்கு முன்னதாக பொதுக் கூட்டம் ஒன்றில் பேசியிருந்த சீமான், வேலூர் சிறையில் இருந்த பேரறிவாளனை மொத்தம் 3,000 பேர் தான் சந்தித்திருந்தனர். நான் அந்த சிறைக்குப் போன 6 மாதத்திலேயே பேரறிவாளன் உள்ளிட்டோரை 50,000 பேர் சந்தித்தனர். என்னால்தான் பேரறிவாளன் சிறையில் இருப்பதையே இத்தனை ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவிப்பதையே வெளி உலகம் தெரிந்து கொண்டது என கூறியிருந்தார். சீமானின் இந்த் பேச்சு பெரும் சர்ச்சையாகவும் நகைப்புக்குரியதாகவும் விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் பேரறிவாளன், சீமானை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாளும் உடன் இருந்தார். மேலும் ராஜீவ் கொலை வழக்கில் வாதாடிய தடா சந்திரசேகரையும் பேரறிவாளன் சந்தித்து நன்றி தெரிவித்தார். சீமான்-பேரறிவாளன் சந்திப்பு தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை நிர்வாகிகள் நெகிழ்வுடனும் புளகாங்கிதத்துடனும் சமூக வலைதளங்களில் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.