முருகனை இறக்கிவிட்டு மயிலை கையில் எடுத்த ஓபிஎஸ்.. என்னதான் நடக்கிறது பெரியகுளத்தில்
பெரியகுளம் அதிமுக வேட்பாளர் மயில்வேல் என்பவர் யார் என்ற ஆர்வம் எழுந்துள்ளது
Recommended Video

சென்னை: பெரியகுளம் வேட்பாளராக முருகனுக்கு பதிலாக அறிவிக்கப்பட்டுள்ள மயில்வேல் யார் தெரியுமா?
பெரியகுளத்தில் அதிமுகவில் வேட்பாளர் முருகன் அறிவிக்கப்பட்டதில் இருந்தே ஏகப்பட்ட பிரச்சனைகள். "உள்ளூர்காரர்கள் இவ்வளவு பேர் இருக்கிறோம், இவ்வளவு காலம் கட்சிக்காக உழைச்சிட்டு வர்றோம்.. யார் அது முருகன்? எந்த மாவட்டம்?
இந்த தொகுதிக்கு அவர் இதுவரை என்ன செய்திருக்கிறார்? மந்திரி ரெகமண்டேஷன்னா சீட் தந்திடுவீங்களோ" என்று கொந்தளித்தனர். இந்த புகார்கள் எல்லாம் கட்சி தலைமைக்கும் கொண்டு செல்லப்பட்டு, பிறகு ஒருவழியாக மயில்வேல் வேட்பாளராக மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளார்.

உட்பூசல்
பெரியகுளம் என்பது தனி தொகுதி. இங்கு பெரும்பாலும் கள்ளர் சமூக மக்கள்தான் அதிகம். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் முருகன், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சேர்ந்தவர். பெரியகுளத்தை பொறுத்தவரை இந்த சமூக மக்கள் குறைவுதான். முருகன் அறிவிப்பினால் உட்பூசல் காரணங்கள் நிறைய இருந்தாலும், சமூக ஓட்டுக்கள் விழ வாய்ப்பில்லை என்பது முக்கியமான காரணம்.

காரணம் இதுதான்
அதேபோல, மயில்வேல் என்பவரும் புதுவேட்பாளர்தான். தேனி மாவட்டம் அல்லி நகரத்தை சேர்ந்தவர். பந்தல் போடும் தொழில் செய்கிறார். புதுமுகமாக இருந்தாலும் இவருக்கு சீட் தர காரணம், இவர் ஆதிதிராவிடர் (பறையர்) சமூகத்தை சேர்ந்தவர். இந்த தொகுதியில் இந்த இன மக்கள் ஓரளவுக்கு இருக்கிறார்கள்.

பெருமை
அதாவது வெற்றி தோல்வியை நிர்ணயிக்க கூடிய அளவில் இந்த சமூக மக்கள் முக்கிய பங்கை வகிக்கிறார்கள். அதனால்தான் மயில்வேலுக்கு சீட் தந்துள்ளனர். அது மட்டுமில்லை, ஒரு சாமான்யனுக்கு சீட் தந்துள்ளதால், அது மேலும் குஷியையும் பெருமையையும் தேடி தந்துள்ளது. இது ஓபிஎஸ்சுக்கு பெருமை சேர்ப்பது போன்ற விஷயமாக அமைந்துள்ளது.

சரவணகுமார்
திமுக வேட்பாளராக சரவணகுமார் களம் இறக்கப்பட்டுள்ளார். தொகுதியில் அறிமுகமானவர். ஆனாலும் முழுக்க முழுக்க திமுக கூட்டணியை நம்பிதான் இறங்குகிறார். ஒரு பிளஸ் பாயிண்ட் என்னவென்றால், கூட்டணியில் சிபிஎம்-விசிக உள்ளது. இந்த இரு கட்சிகள் சார்பாக இந்த தொகுதியில் ஓரளவு இவருக்கு ஓட்டுக்கள் விழ வாய்ப்புள்ளது.

கதிர்காமு
இதேபோல, அமமுக சார்பில் நிறுத்தப்படும் டாக்டர் கதிர்காமு அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர். இவர் கட்சிக்கும், தொகுதிக்கும் ஏற்கனவே அறிமுகமானவர். தேனியை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்தே அமமுகவா, அதிமுகவா என்ற போட்டிதான் நிலவி வருகிறது.

செம போட்டி
இதனால் அமமுகவை தோற்கடிக்க அதிமுக எல்லா வேலைகளிலும் இறங்கும் என தெரிகிறது. இதுபோக, துரோகம் செய்துவிட்டு கட்சி மாறிவிட்டதால், கதிர்காமு மீது ஓபிஎஸ் தரப்பு செம கடுப்புடன் உள்ளது. அதனால் பெரியகுளத்தை பொறுத்தவரையில் மிக கடுமையான போட்டி அமமுகவுக்கும், அதிமுகவுக்கும் நிலவும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications