பெரியாரின் தாடி முளைத்த போது சமூகத்துக்கு மீசை முளைத்தது! கவிதை மூலம் புகழாரம் சூட்டிய வைரமுத்து!
சென்னை: தந்தை பெரியாரின் 147 வது பிறந்தநாள் விழாவானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி வாழ்த்து கவிதையை பகிர்ந்துள்ளார் கவிஞர் வைரமுத்து. பெரியாரின் தாடி முளைத்த போது சமூகத்துக்கு மீசை முளைத்தது என புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், கருப்பு நிலக்கரி வைரமாகக் காலம் ஆகும் கருப்பு வண்ணம் புரிதல்பெற இன்னும் ஒரு யுகமாகும் என கூறியுள்ளார்.
பகுத்தறிவு பகலவன். வைக்கம் வீரர் என கொண்டாடப்படும் தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதை ஒட்டி உலகம் முழுவதும் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட தலைவர்கள் பெரியார் பிறந்த நாளை ஒட்டி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியும். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து வருகின்றனர்.

பெரியாரின் பிறந்தநாள் விழா சமூகநீதி விழாவாக தமிழகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்படும். இந்த நிலையில் பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு கவிதை மூலம் புகழாரம் சூட்டியுள்ளார் கவிஞர் வைரமுத்து.
இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"
உன் தாடி முளைத்தபோது
— வைரமுத்து (@Vairamuthu) September 17, 2025
சமூகத்துக்கு மீசை முளைத்தது
இருட்டுச் சுவர்
இடியத் தொடங்கியது
கி.மு - கி.பி பழைய கணக்கு
பெ.மு - பெ.பி புதிய கணக்கு
நூற்றாண்டுகளாய்
எங்கள் புலிகள்
ஆடுகளுக்குப்
புல்பறித்துக் கொண்டும்
பல்தேய்த்துக் கொண்டுமிருந்தன
நகத்தில் கூர்மையும்
முகத்தில் மீசையும்… pic.twitter.com/x18s69AG88
உன் தாடி முளைத்தபோது
சமூகத்துக்கு மீசை முளைத்தது
இருட்டுச் சுவர்
இடியத் தொடங்கியது
கி.மு - கி.பி பழைய கணக்கு
பெ.மு - பெ.பி புதிய கணக்கு
நூற்றாண்டுகளாய்
எங்கள் புலிகள்
ஆடுகளுக்குப்
புல்பறித்துக் கொண்டும்
பல்தேய்த்துக் கொண்டுமிருந்தன
நகத்தில் கூர்மையும்
முகத்தில் மீசையும்
உண்டென்பதை
புலிகளுக்கு நீதான்
புலப்படுத்தினாய்
நீறுகளை ஊதி
நெருப்பை அடையாளம்காட்டிய
சுற்றுப்பயணச் சூறாவளி நீ
வர்க்கப் போரின்
இன்னோர் வடிவம்
உன் தர்க்கப்போர்
நீ சொன்ன பிறகுதான்
செருப்புத் தைத்தவன்
கையில் இருந்ததைக்
காலில் அணிந்தான்
நிர்வாணமாய்
நெசவு செய்தவன்
ஆடை சூடினான்
கலப்பையில் எழுதியவன்
காகிதத்தில் எழுதினான்
சூரியன் வந்ததும்
உடுக்கள் என்னும்
வடுக்கள் மறைவதுபோல்
உன் வருகையால்
வெள்ளை அழுக்கு
வெள்ளாவிவைத்து
வெளுக்கப்பட்டது
பழைமைவாதப் பாம்படித்ததும்
ஓலைக் குடிசைகளின்
ஒட்டடை அடித்ததும்
புலம்பும் புராணங்களுக்கெதிராய்ச்
சிலம்பம் சுற்றியதும்
உனது ஒற்றைக் கைத்தடிதான்
மூலக்கூறு பிரித்தால்
கடைசிவரை
தங்கம் தங்கம்தான்
உன் மரணத்தின்
முன் நிமிடம்வரை
நீ பேசும்புயல்தான்; பெரியார்தான்
கருப்பு நிலக்கரி வைரமாகக்
காலம் ஆகும்
கருப்பு வண்ணம் புரிதல்பெற
இன்னும் ஒரு யுகமாகும்
புகழ் வணக்கம்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications