தொமுச போல திமுகவில் "புலம் பெயர் வடமாநிலத் தொழிலாளர் கழகம்" தொடங்கலாமே.. பெரியாரிஸ்டுகள் ஐடியா
திமுகவில் "புலம் பெயர் வடமாநிலத் தொழிலாளர் கழகம்" தொடங்கலாம் என்பது பெரியாரிஸ்டுகள் யோசனை.
சென்னை: திமுகவில் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் போல புலம் பெயர் வட மாநில தொழிலாளர் கழகம் ஒன்றை தொடங்கலாம் என பெரியாரிஸ்டுகல் யோசனையை முன்வைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வட இந்தியர்கள், வட மாநிலத்தவர் வருகை தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது.

தமிழகத்தின் தொழில் நிறுவனங்களில் வட இந்தியர்கள் பணிபுரிவதும் இயல்பானதாகிவிட்டது.
ஆனால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்டவை, தமிழ்நாட்டில் தமிழரின் வேலைவாய்ப்பை வட இந்தியர்கள் அல்லது வட மாநிலத்தவர் பறிப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தமிழ்நாட்டவருக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதும் இந்த கட்சிகளின் கோரிக்கை.
இன்னொரு பக்கம் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வட மாநில தொழிலாளர்களால் தமிழர் நிலம் பறிபோகிறது; தமிழர் ஆட்சி அதிகாரம் பறிபோகப் போகிறது. நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் வட மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு சிறப்பு ரயில் மூலம் வட இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படுவர்; இல்லை எனில் வட மாநிலத்தவர் மீது பாலியல் பலாத்காரம், போதைப் பொருட்கள் கடத்தல் என பல வழக்குகள் போடப்படும் என மிரட்டல் விடுத்திருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர்களுக்கு ஆபத்து என வதந்தி காட்டுத்தீயாக பரவியது. ஆனால் தமிழ்நாடு அரசும் போலீசாரும் தீவிரமாக செயல்பட்டு இந்த வதந்தியை கட்டுப்படுத்தி உள்ளனர். இத்தகைய வதந்தியில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் சிலர் தொடர்ந்து வதந்திகளை பரப்புவதால் சமூக வலைதளங்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்,
இதனிடையே வட இந்தியர்கள் வருகை, பங்களிப்பு தவிர்க்க இயலாத என்ற நிலையில் தொமுச போல திமுகவில் "புலம் பெயர் வடமாநிலத் தொழிலாளர் கழகம்" ஒன்றை தொடங்கலாம் என பெரியாரிஸ்டுகள் யோசனையை முன்வைத்துள்ளனர். இது தொடர்பாக பெரியாரிஸ்ட் அதி அசுரன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: தி.மு.க.வின் முன்னணி அமைப்பாக "புலம் பெயர் வடமாநிலத் தொழிலாளர் கழகம்" என்பது போன்ற ஒரு அமைப்பைத் தொடங்க வேண்டிய மிக மிகச் சரியான காலம் இது.
1.பிற மாநிலத் தொழிலாளர்களின் நலன்கள், உரிமைகள் பாதுகாப்பிற்காகவும்,
2. எதிர்காலத்தில் அவர்களது வாக்கு திராவிட இயக்கங்களுக்கு எதிராகத் திரும்பாமல் இருக்கவும்,
3. இந்தியா முழுவதும் பல்வேறு தேசிய இனங்களாக வாழும் திராவிடர் இன மக்களின் அரசியல் விடுதலை அமைப்பாக தி.மு.க.உருவாகவும்
இந்தத் துணை அமைப்பு மிக மிக அவசியம். இந்தி நன்கு தெரிந்த தோழர்களைப் பொறுப்பாளர்களாக நியமிப்பதும் அவசியம் என பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் விவாதம் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications