குஜராத்திலிருந்து 3000 கிலோ ஹெராயின் கடத்தல்..பின்புலத்தில் இருக்கும் நிழல் மனிதர்கள் யார்?..முரசொலி
சென்னை: குஜராத் முந்த்ரா துறைமுகம் வழியாக கொண்டு வரப்பட்ட 3000 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இதன் பின்னால் இருக்கும் நிழல் மனிதர்கள் யார் என சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் முரசொலி கட்டுரையில் தெரிவித்தார்.
இதுகுறித்து முரசொலி நாளிதழுக்கு சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் எழுதிய கட்டுரையில், கடந்த வாரம் சென்னை கொட்டிவாக்கத்தில் வசித்து வந்த கோவிந்தராஜூ துர்கா பூரண வைஷாலி என்ற பெண்ணையும், அவரது கணவர் மச்சாவரம் சுதாகர் என்பவரையும் டெல்லியிலிருந்து வருவாய் புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் குஜராத் அதானி முந்த்ரா துறைமுகம் வழியாக இரண்டு கன்டெய்னர்களில் 39 மூட்டைகள் டால்கம் பவுடர் இறக்குமதி செய்துள்ளனர்.

ஆப்கானிஸ்தான் கண்டகாரிலிருந்து ஈரான் பண்டார் அப்பாஸ் துறைமுகம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து குஜராத்தில் அது இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதித்துப் பார்த்த போது அந்தப் பவுடர் 3000 கிலோ உயர்தர ஹெராயின் எனும் போதைமருந்து என தெரியவந்தது. இதன் இந்திய மதிப்பு ரூ 21 ஆயிரம் கோடியாகும். இப்போது பிடிபட்டுள்ள நிறுவனம் கடந்த ஜூன் மாதத்தில் இதே சரக்கை 25 ஆயிரம் கிலோ இறக்குமதி செய்து சந்தைப்படுத்தியுள்ளது.
அதனுடைய மதிப்பு ரூ 1.75 லட்சம் கோடி என்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனை இறக்குமதி செய்ய தங்களது இறக்குமதி உரிமத்தைக் கொடுத்து உதவிய சென்னைத் தம்பதியருக்கு ரூ 10 லட்சம் மட்டும் கொடுத்ததாகத் தெரிகிறது. துறைமுகத்தின் முதலாளியான அதானி குழுமம் தங்களுக்கு இதில் எந்தப் பொறுப்பும் , சம்பந்தமும் இல்லையென தெரிவித்துள்ளனர். இறக்குமதியாகும் கன்டெய்னர்களில் என்ன இருக்கிறது என்று பார்க்கும் வேலை ஒன்றிய அரசின் சுங்கத் துறை அதிகாரிகளின் பணி. அதையெல்லாம் தாங்கள் கண்காணிப்பதில்லை என சொல்லி ஒதுங்கிக் கொண்டது.
இரு மாதத்திற்கு முன்பு கோலிவுட் திரையுலகைச் சேர்ந்த சில திரைப்பட நட்சத்திரங்கள் நடத்திய ஒரு விருந்து நிகழ்ச்சியில் 30 கிராம் போதைப் பொருள் பிடிபட்டதையும் அது சம்பந்தமாக சில திரைப்பட நட்சத்திரங்களை போதைப் பொருள் தடுப்புப் போலீஸார் மூன்று வாரமாக தொடர்ந்து விசாரித்தனர். அதை நமது தேசிய ஊடகங்கள் 5 வாரங்களாக நேரலையாக ஒளிபரப்பினார்கள். பல கால கட்டங்களில் மோடி அரசின் நடவடிக்கைகளை தங்களது சமூக ஊடகப் பக்கங்களில் விமர்சித்த திரைப்பட நடிகர் நடிகைகளையெல்லாம் விசாரணைக்கு அழைத்து வந்து அதையெல்லாம் தேசிய ஊடகங்கள் மணிக்கணக்காக பிரைம் டைமில் காண்பித்து வியாபாரமாக்கினர். 30 கிராமுக்கு நமது ஊடகங்கள் தந்த நேரத்தில் நூற்றில் ஒரு பங்கைக் கூட 30 டன்னுக்குத் தரவில்லை.
300 கிலோ குட்கா வந்தால் கூட நம்மூர் போலீஸார் மடக்கி பிடித்துவிடுகிறார்கள். அப்படியிருக்கும் போது 30 டன் ஹெராயின் முந்த்ராவிலிருந்து மூன்று மாநிலங்கள் தாண்டி 1300 கி.மீட்டர்கள் பெரிய கன்டெய்னர்களில் அதுவும் தேசிய நெடுஞ்சாலைகளில் 30 சோதனைச் சாவடிகளைத் தாண்டி பயணிக்கிறது என்றால் அக்கடத்தல் கும்பல் எவ்வளவு சக்தி வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்பதை யாரும் யூகித்து விடலாம். தமிழ்நாட்டில் திருவண்ணாமலையில் ஒரு ஆற்றின் குறுக்கே கிராமத்துப் பெண்கள் கட்டிய தடுப்பணையை பற்றி தெரிந்து வைத்துக் கொண்டிருக்கும் நமது பிரதமர் அவரது சொந்த மாநிலத்தில் நடந்த இந்த பெரும் போதை மருந்துக் கடத்தலை பற்றி தெரியாதா என்ன?
இந்தியாவின் எந்த மூலையிலும் எது நடந்தாலும் தெரிந்து கொள்ளும் சக்தி கொண்ட உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் இதுகுறித்து தெரியாதா. ஏன் இருவருமே இதை பற்றி எதுவுமே பேசவில்லை என எந்த ஊடகத்தினரும் கேட்டு விட முடியுமா? இக்கடத்தலுக்குப் பின்னால் உள்ள நிழல் மனிதர்கள் யார், இவர்களுக்கு ஏதேனும் அரசியல் தொடர்பு உண்டா? ஒரு தனியார் துறைமுகத்தில் ஆறு மாதத்தில் இரண்டு லட்சம் கோடிக்கு போதைப் பொருள் கடத்தப்படுகிறது என்றால் நாடு முழுவதும் தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டிருக்கும் மற்ற தனியார் துறைமுகங்களுக்கு எத்தனை லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருட்கள் வந்திருக்கும்?
இப்போதை பொருள் விற்பனை மூலம் வரும் லட்சக்கணக்கான கோடி ரூபாய்களுக்கும் சம்பந்தமே இல்லாமல் தாறுமாறாக எகிறும் இந்திய பங்கு சந்தை வியாபாரத்திற்கும் தொடர்புண்டா? அரசியல் கட்திகளுக்கு தேர்தல் நிதியாக தரப்பிடுகிற தேர்தல் பாண்ட் பத்திரங்களுக்கும் இக்கடத்தல் பேர் வழிகளுக்கும் சம்பந்தம் உண்டா, இப்படிப்பட்ட கடத்தல்காரர்கள் ஒன்றிணைந்து தங்களுக்குச் சாதகமான கட்சியை ஆட்சியில் அமர்த்த முடிவெடுத்தால் அந்த கட்சியின் பணபலத்தை தேர்தல் களத்தில் மற்ற கட்சிகள் எப்படி எதிர்கொள்ளும்? இ்நதிய ஜனநாயகத்தின் எதிர்காலம் என்னவாகும்? போதை பொருள் கடத்த முடிந்த இந்த கும்பலுக்கு ஆயுதங்களையும் வெடி பொருட்களையும் கடத்தி வர முடியாதா, அப்படி செய்தால் தேசத்தின் பாதுகாப்பு என்ன ஆகும்? என தனது கட்டுரையில் பீட்டர் அல்போன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications