திமுக எம்பி கதிர் ஆனந்தின் கல்லூரி அறைக்கு சீல்.. மனு மீது நாளை விசாரணை - உயர்நீதிமன்றம்
சென்னை: திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரியின் சர்வர் ரூமிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்குச் சொந்தமான கிங்ஸ்டன் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் கடந்த 3 ஆம் தேதி அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. கிங்ஸ்டன் கல்லூரியில் நடத்தப்பட்ட சோதனையின் முடிவில் அந்த கல்லூரியின் சர்வர் ரூமிற்கு அமலாக்கத்துறை சீல் வைத்தது.

இந்நிலையில், சீலை அகற்ற உத்தரவிடக் கோரி கல்லூரி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், அமலாக்கத் துறையின் சோதனைக்கு முழுமையான ஒத்துழைப்பு அளிக்கப்பட்டதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
சர்வர் ரூமிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் கல்லூரியில் உள்ள கம்ப்யூட்டர்கள், சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவை செயல்பட முடியாததால் கல்லூரியின் ஒட்டுமொத்த செயல்பாடுகளும் முடக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதி ராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த மனுவை நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
திமுக எம்பி கதிர் ஆனந்த் அவர்களுக்கு சொந்தமான வீடு, அலுவலகம், கல்லூரி ஆகிய இடங்களில் அமலாக்கத் துறை கடந்த சில நாள்களுக்கு முன்பு சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில் ஹார்ட் டிஸ்க், பென் டிரைவ் உள்ளிட்ட சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும், ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜனவரி 22 ஆம் தேதி கதிர் ஆனந்த் அமலாக்கத் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சம்மனை ஏற்று திமுக எம்பி கதிர் ஆனந்த் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராவார் என்று கூறப்படுகிறது. இந்த விசாரணைக்கு பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications