ரெடியா இருங்க மக்களே! சட்டுன்னு ஏறப்போகும் பெட்ரோல், டீசல் விலை! தேதி குறிச்சாச்சு!
சென்னை: ஈரான் போர் காரணமாக, சர்வதேச அளவில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்திருக்கிறது. இந்நிலையில், இந்தியாவிலும் விலை உயரலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், 5 மாநில தேர்தல் காரணமாக விலை உயர்வு தற்காலிகமாக தள்ளிப்போய் இருக்கிறது. இந்த தேர்தல் முடிந்த பின்னர் எரிபொருள் விலை உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச நிலைமை என்ன?
சர்வதேச அளவில், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்ந்திருக்கிறது. ஒரு கேலன் (3.7 லி) பெட்ரோல் 4 டாலருக்கு (ரூ.376) விற்கப்பட்டு வருகிறது. முன்னர் இதன் விலை 3 டாலர் என்கிற அளவில்தான் இருந்தது. ஈரான் போர் காரணமாக விலை ஏறியிருக்கிறது. தற்போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 120 டாலருக்கு விற்பனையாகிறது.
ஆசிய நாடுகளில் விலையேற்றம்
இதன் காரணமாக அமெரிக்கா மட்டுமல்லாது வேறு சில நாடுகளிலும் பெட்ரோல் விலை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, வியட்நாமில் பெட்ரோல் விலை 50% அதிகரித்திருக்கிறது.
லாவோசில் 33%, கம்போடியாவில் 19% என விலை உயர்ந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் 23% உயர்ந்திருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை ஏற்கெனவே பிரீமியம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2 உயர்ந்திருக்கிறது. தவிர, தொழில்துறை டீசல் லிட்டருக்கு ரூ.22ம் அதிகரித்திருக்கிறது.
இந்தியாவில் எப்போது விலை ஏறும்?
ஏப்.29ம் தேதியுடன் 5 மாநில தேர்தல்கள் முடிவடைகின்றன. எனவே அன்றைய தினம் மாலை இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரலாம் என்று நிபுணர்கள் பலர் கூறுகின்றனர்.
- தற்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.93 எனவும்
- டீசல் லிட்டருக்கு ரூ.92.48 எனவும் விற்பனையாகி வருகிறது.
இந்தியாவின் பெட்ரோல் இருப்பு நிலவரம்
இந்தியாவிடம் குறிப்பிட்ட அளவுக்கு பெட்ரோல் இருப்பு இருக்கிறது. இதை வைத்து இரண்டரை மாதங்களுக்கு சமாளிக்க முடியும். சரியாக சொல்வதெனில் 74 நாட்களுக்கு சமாளிக்கலாம். அவசர காலத்திற்கு பயன்படுத்த, பூமிக்கடியில் பாறையை குடைந்து, 5.33 மில்லியன் மெட்ரிக் டன் அளவு கச்சா எண்ணெய் சேமிக்கப்பட்டிருக்கிறது. இது 9.5 நாட்களுக்கு வரும்.
ஏன் விலை ஏற்றம்?
இது தவிர, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்கள் சுமார் 4,000 கோடி லிட்டர் கச்சா எண்ணெய்யை வைத்திருக்கின்றன. இது 64.5 நாட்களுக்கு போதுமானது. எனவே, விலை குறைக்க வாய்ப்பு இல்லை என்று நினைக்கலாம். ஆனால், இதை இந்தியா ரிசர்வில்தான் வைத்திருக்கிறது.
அதாவது போர் ரொம்பவும் மோசமாகி, இனி நமக்கு கச்சா எண்ணெய் சுத்தமாக கிடைக்கவே கிடைக்காது என்கிற நிலை வந்தால்தான் அதை பயன்படுத்த முடியும்.
எனவே தற்போதைய சூழலில் அதிக அளவில் பணம் கொடுத்து வாங்கி எண்ணெயை பயன்படுத்த இந்தியா ரெடியாக இருக்கிறது. இதற்கான செலவுகளை பொதுமக்கள் தலையில் சீக்கிரமே விழும். ஏப்.29 அன்றுதான் விலை ஏறும் என கிடையாது. அதற்கு முன்னர் கூட விலை உயரலாம்.












Click it and Unblock the Notifications