பெரியாரை பற்றி பேசவே ஆரம்பிக்கலையே... குண்டு போட வருவீங்களா? தீக்குளிச்சு சாவீங்க..அடங்காத சீமான்!
சென்னை: தந்தை பெரியார் குறித்து தாம் பேசவே தொடங்கவில்லை.. அதற்குள் என் வீடு மீது குண்டு வீச வருவீர்களா? நான் பெரியாரை பற்றி பேச தொடங்கினால் எல்லோரும் தீக்குளித்து செத்துவிடுவீர்கள் என பெரியார் தொண்டர்களை மீண்டும் மிரட்டி இருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
தந்தை பெரியார் குறித்து ஆபாசமாகவும் இழிவாகவும் மிக மோசமான முறையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வருகிறார். தந்தை பெரியார் குறித்த சீமானின் இத்தகைய பேச்சுக்கு எதிராக 53 காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்குகளை ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனுத் தாக்கல் செய்துள்ளார். மேலும் தந்தை பெரியார் பேசியதைதான் தாம் குறிப்பிட்டதாகவும் பெரியார் குறித்து இழிவாகப் பேசவில்லை என்றும் சீமான் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னை மாவட்ட தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவர் டிங்கர் குமரன் உள்ளிட்ட அந்த இயக்கத்தின் 10 நிர்வாகிகளை சென்னை போலீசார் இன்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 பெட்ரோல் குண்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. தந்தை பெரியாரை இழிவாக பேசி வரும் சீமான் வீடு மீது பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியதாக 10 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக சீமான் தெரிவித்த கருத்து: பெரியார் குறித்து நான் இன்னமும் பேசவே ஆரம்பிக்கவில்லையே.. அதற்குள் குண்டு போட வருவீங்களா? பெரியாரை யாரும் இழிவாக பேசவில்லை.. பெரியார் பேசியதை எழுதியதைத்தான் பேசினேன்.
அப்ப நான் பெரியாரைப் பற்றி பேசத் தொடங்கினால் நீ என்ன செய்வ? நீ என்ன தீக்குளித்து செத்து போவியா? என்ன பண்ணுவீங்க.. ஏய்..
இதற்கு எல்லாம் பயப்படுகிற ஆள் நானில்லை.. ஏதோ வேற வேலை இருக்கிறது.. அதனால் இடைவெளி விட்டிருக்கிறேன்.. மறுபடியும் ஆரம்பித்துவிடுவேன்.. பார்த்து அடக்கமா இருங்க.. தோண்டி தோண்டி எடுத்து என் முன்னாடி நிறுத்தாதீங்க.. இவ்வாறு சீமான் மிரட்டல் விடுத்தார்.












Click it and Unblock the Notifications